இதய நுரையீரல்களைத் திரும்ப உயிர்ப்பித்தல்/சிபிஆர் (பிள்ளைகளில்): முதலுதவி

CPR in a child (from age 1 to puberty): First aid [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

​சிபிஆர் முறையானது, மார்புக்கு அழுத்தங்களைக் கொடுத்தல், சுவாசத்தை மீட்டல் (வாய் மீது வாயை வைத்து மீள உயிர்ப்பித்தல்) என்பனவற்றை இணைத்துச் செய்யப்படுகிறது. கைகளினால் செய்யபபடும் சிபிஆர் பயிற்சியுடன், இந்தத் தகவல்கள் உங்களுடைய பிள்ளையின் உயிரைப் பாதுகாக்க உத

இதய – நுரையீரல்களை மீள உயிர்ப்பித்தல் (சிபிஆர்) என்றால் என்ன?

சிபிஆர் என்பது இதய- நுரையீரல்களை மீள உயிர்ப்பித்தல் என்பதை அர்த்தப்படுத்துகிறது. மார்பை அழுத்தி சுவாசத்தை மீட்கும் ( வாய் மீது வாயை வைத்து மீள உயிர்ப்பித்தல்) ஒரு அவசர சிகிச்சைச் செயற்பாட்டை உட்படுத்துகிறது. இதயம் செயலிழப்பதை அனுபவிக்கும் ஒருவருக்குத் தகுந்த முறையில் இதய- நுரையீரல்களை மீள உயிர்ப்பித்தல் சிகிச்சை கொடுக்கப்படும்போது சுவாசித்தலையும் இரத்த ஒட்டத்தையும் பழைய நிலைக்குக்குக் கொண்டுவர முடியும். பிள்ளைகளுக்கும் பதின்ம வயதினருக்கும் பெரும்பாலும் மிகப் பெரிய காயங்கள் அல்லது நோய்கள், மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மறைந்திருக்கும் இதய நோய் என்பனவற்றின் விளைவாக இதயம் செயலிழந்தும்போகலாம். வேறு காரணங்கள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

  • நீரில் மூழ்குதல்
  • மூச்சுத் திணறல்
  • மின்சாரம் பாய்தல்
  • நஞ்சூட்டப்படுதல் அல்லது நஞ்சினால் மயக்கமடைதல்
  • உயிரை அச்சுறுத்தும் ஒவ்வாமை (கடும் ஒவ்வாமை)யின் எதிர்விளைவுகள்
CPR மார்பழுத்தங்களுக்காக பிள்ளையை நிலைநிறுத்தல்

சிபிஆர் பயிற்சி வகுப்புக்கள் பெரும்பாலும், உள்ளூர் பொழுதுபோக்குத் திட்டங்கள், மேம்பட்ட நீச்சல் திட்டங்கள், முதலுதவித் திட்டங்கள் என்பவற்றின் மூலமாகக் கிடைக்கும். அடிப்படைத் திறமைகள் மிகவும் எளிதானது; அதைப் பெரும்பாலும் ஒரு சில மணி நேரங்களில் கற்றுக்கொள்ளலாம்.

உங்களுடைய பிள்ளைக்கு சிபிஆர் செய்தல்

உங்களுடைய பிள்ளையின் தோளைத் தட்டி உரத்த சத்தமாக, “நீ நன்றாக இருக்கிறாயா? எனக் கேட்பதன் மூலம் அவன் பிரதிபலிக்கிறானா என்பதைச் சோதித்துப் பார்க்கவும். அவன் பதிலளிக்காவிட்டால், உடனடியாக 9-1-1 ஐ அழைக்கவும். நீங்கள் தனிமையாக இல்லாவிட்டால், உங்களுக்காக அழைக்கும்படி வேறு எவரையாவது கேட்கவும்.

அவன் பதிலளித்தால், அவனுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டிருக்கிறதா என்பதை விரைவாகச் சோதித்துப் பார்க்கவும். அவனுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்பட்டால், எவரையாவது உடனடியாக 9-1-1 ஐ அழைக்கும்படி கேட்கவும். நீங்கள் தனிமையாக இருந்தால், நீங்கள் 9-1-1ஐ அழைப்பதற்குச் செல்வதற்கு முன்பாக, உங்களுடைய பிள்ளை சுவாசிக்கிறானா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவும்.

சுவாசித்தலைச் சோதித்துப்பார்த்தல்

அவனுடைய மார்பில் ஏதாவது அசைவு இருக்கிறதா என்பதை அவதானிப்பதன் மூலம் சுவாசித்தலைச் சோதித்துப்பார்க்கவும். அவன் சுவாசிப்பதைக் கேட்பதற்காகவும் உணருவதற்காகவும் உங்களுடைய காதையும் அவனுடைய வாயின் மேல் வைக்கலாம். உங்களுடைய பிள்ளை உணர்விழந்திருந்து சுவாசிக்காதிருந்தால் உடனே 9-1-1 ஐ அழைக்கவும். நீங்கள் தனிமையாக இல்லாவிட்டால், உங்களுக்காக அழைக்கும்படி வேறு எவரையாவது கேட்கவும்.

மார்பில் அழுத்தங்களைக் கொடுத்தல்

ஒரு உறுதியான தட்டையான மேற்பரப்பில் உங்களுடைய பிள்ளையைப் படுக்கவைத்து, சிபிஆர் ஐத் தொடங்கவும். உங்களுடைய பிள்ளைக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது என நீங்கள் கருதினால், அவனுடைய கழுத்துக்குப் பின்பாக ஒரு சுருட்டப்பட்ட துவாயை அல்லது புதினப்பத்திரிகையை வைக்கவும். உங்களுடைய உள்ளங்கையின் அடிப்பகுதியை அவனுடைய மார்பெலும்பின் கீழ்ப்பகுதி (கடைசி மூன்றாவது பகுதி) மேல் வைத்து 30 விரைவான மார்பு அழுத்தங்களைக் கொடுக்கவும். அவனுடைய மார்பு ஏறக்குறைய 2அங்குலம் உள்ளே செல்லக்கூடியளவு கடினமாக அழுத்துவதற்கு நிச்சயமாக இருக்கவும். இந்தச் செயற்பாடு, அவனுடைய மூளைக்கும் மற்ற முக்கியமான உறுப்புகளுக்கும் இரத்தத்தைப் பாயச் செய்யும்.

சுவாசத்தை மீட்டல்

காற்றுக்குழாயைத் திறத்தல்

முதல் 30 மார்பழுத்தங்களின் பின்னர், உங்களுடைய உள்ளங்கையை உங்களுடைய பிள்ளையின் நெற்றியில் வைக்கவும். உங்களுடைய இரண்டு விரல்களை அவனுடைய கீழ்த்தாடையின் நுனியில் வைத்து தலையைப் பின்புறமாக மென்மையாகச் சரிக்கவும். இது அவனுடைய காற்றுக்குழாயைத் திறக்கும்.

மீட்சி மூச்செடுப்புக்களுக்காக பிள்ளையின் காற்றுவழியைத் திறத்தல்

சுவாசத்தை மீட்கத் தொடங்கவும்

அவனுடைய மூக்கைக் கிள்ளி, உங்களுடைய வாயை அவனுடைய வாய்க்கு மேல் வைத்து இரண்டு மெதுவான சுவாசங்களைக் கொடுக்கவும். ஒவ்வொரு சுவாசத்தின்போதும் அவனுடைய மார்பு மேலெழுவதைப் பார்ப்பதற்கு நிச்சயமாக இருக்கவும்.

CPR மீட்சி மூச்செடுப்புக்களைப் பிள்ளைக்கு வழங்கல்

மீண்டும் செய்யவும்

அம்புலன்ஸ் வண்டி வரும்வரை, அல்லது உங்களுடைய பிள்ளை மீண்டும் சுவாசிக்கத் தொடங்கும்வரை, இந்த 30 மார்பு அழுத்தங்கள், இரண்டு சுவாசங்களின் சுற்றை ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறையாகத் திரும்பத் திரும்பச் செய்யவும்.

CPR மார்பழுத்தங்களை மீளச் செய்தல்

நிவாரணமடையும் நிலை (ரிகவரி பொஷிஷன்)

சிபிஆர் வழங்கிய பின்னர் உங்களுடைய பிள்ளை வாந்தியெடுப்பதும் சுவாசிக்கச் சிரமப்படுவதும் சாதாரணமானது. உங்களுடைய பிள்ளையின் முகம் வெறுமனே சற்றுக் கீழ் நோக்கும் வண்ணம் நிவாரணமடையும் நிலையில் வைக்கவும். அவனுடைய முகத்தை அல்லது மூக்கை எதுவுமே அடைத்துவிடாதிருப்பதற்கு அல்லது மூடிவிடாதிருப்பதற்கு நிச்சயமாக இருக்கவும். உங்களுடைய பிள்ளையின் காற்றுக்குழாயைத் திறந்து வைத்திருப்பதற்கு அவனுடைய நிவாரணமடையும் நிலை உதவி செய்யும்.

மீட்சிக்கான நிலையில் பிள்ளையைப் படுக்கவைத்தல்

முக்கிய குறிப்புகள்

  • சிபிஆர் ஆனது இதய அழுத்தங்கள், சுவாசத்தை மீட்டல் (வாய் மீது வாயை வைத்து மீள் உயிர்ப்பித்தல்) இரண்டையுமே உட்படுத்தும்.
  • சிபிஆர், சுவாசத்தை மீண்டும் தொடங்குவதற்கும் மூளைக்கும் மற்ற முக்கியமான உறுப்புகளுக்கும் இரத்தத்தைப் பாயச் செய்வதற்கும் உதவி செய்யும்.
  • உங்களுடைய பிள்ளை உணர்விழந்திருந்து சுவாசிக்காதிருந்தால் உடனே 9-1-1 ஐ அழைக்கவும்.
  • உங்களுடைய பிள்ளையின் மார்பில் ஏதாவது அசைவு இருக்கிறதா என்பதை அவதானிப்பதன் மூலம் சுவாசித்தலைச் சோதித்துப்பார்க்கவும். அவன் சுவாசிப்பதைக் கேட்பதற்காகவும் உணருவதற்காகவும் உங்களுடைய காதையும் அவனுடைய வாயின் மேல் வைக்கலாம்.
  • உங்களுடைய பிள்ளைக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டிருக்கிறது என நீங்கள் கருதினால், அவனுடைய கழுத்துக்குப் பின்பாக ஒரு சுருட்டப்பட்ட துவாயை அல்லது புதினப்பத்திரிகையை வைக்கவும்.
  • சிபிஆர் வழங்கிய பின்பாக உங்களுடைய பிள்ளையை நிவாரணமடையும் நிலையில் வைக்கவும். இது அவனுடைய காற்றுக்குழாயைத் திறந்து வைக்கும்.
Last updated: March 10 2011