குழந்தைகளில் அழுகை

Crying in newborns [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

பொதுவான குழந்தை உறக்கப் பிரச்சனைகள் பற்றியும், குழந்தை தூக்கத்திலிருந்து எழும் போது ஏன் அழுகிறது என்பதைப் பற்றியும், உங்களது குழந்தை இரவில் உறங்குவதற்கு எவ்வாறு உதவுவது (பகல்நேர சிறு தூக்கத்தை குறைத்தைல் போன்ற) என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகள் அழும்போது அதைப் பெற்றோர்களால் தாங்கிக்கொள்ள இயலுவதில்லை. உங்கள் குழந்தை அழும்பொழுது அவனுடைய தேவையைப் பூர்த்திசெய்வதற்காக நீங்கள் கடினமாக முயலுவீர்கள். உங்கள் குழந்தையின் அழுகையும் அதற்கு நீங்கள் பிரதிபலிக்கும் விதமுமே நீங்கள் பகிர்ந்துகொள்ளும் முதலாவது மொழியாகும். அவனுடைய அழுகைக்கு நீங்கள் பிரதிபலிப்பதன்மூலம் குழந்தை ஆறுதலடையும்போது நீங்கள் தேர்ச்சிபெற்றவர் போல் உணருகிறீர்கள். உங்கள் குழந்தையின் அழுகை அடிக்கடி ஏற்படுவதாயும், கடுமையானதாயும் மற்றும் தேற்றுவதற்கு கடினமானதாகவும் இருக்கும்போது நீங்கள் மனம் உடைந்தோ அல்லது மனக்கலக்கம் அடைந்தோ போகலாம். உங்கள் குழந்தையின் அழுகையை புரிந்துகொள்ள இந்தத் தகவல் உங்களுக்கு உதவும்.

வாழ்க்கையின் முதல் மூன்று மாதங்களில் அழுகையைப்பற்றி நாங்கள் தெரிந்து வைத்திருப்பதென்ன?

  • சில குழந்தைகள் மற்றக் குழந்தைகளைவிட அதிகமாக அழுகின்றன.
  • மதிய நேரத்துக்குப் பின்பு அல்லது பின்னேரங்களின் முன்பகுதியில்தான் எல்லாக் குழந்தைகளும் அதிகமாக அழுது சிடுசிடுக்கின்றன.
  • எல்லாக் குழந்தைக்ளும் தங்கள் வாழ்க்கையின் முதல் மூன்று மாதங்களில்தான், இனிவரும் காலங்களைவிட அதிகமாக அழுகிறார்கள்.
  • வாழ்க்கையின் முதல் மூன்று மாதங்களில், குழந்தைகளில் அழுகை ஒரு வளர்ச்சி மாதிரியைப் பின்பற்றுவதாக அநேக ஆய்வுகள் காண்பிக்கின்றன. இந்த மாதிரி அழுகை வளைவு எனப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று வார வயதின்போது அழுகை கூடத்தொடங்குகிறது, ஆறு தொடங்கி எட்டு வார வயதின்போது உச்சத்தை அடைகின்றது, 12 வார வயதுவரை மெதுவாகக் குறையத் தொடங்குகிறது. வேறு சில ஆய்வுகளோ வித்தியாசமான அழுகை மாதிரிகளைக் காண்பித்தாலும், வாழ்க்கையின் முதல் மூன்று மாத காலத்தில்தான் அதிக அளவான அழுகை ஏற்படுவதாக எல்லா ஆய்வுகளும் காண்பிக்கின்றன.
  • எச்சரிக்கை இல்லாமல் தொடங்கி ஆறுதல்ப் படுத்தினாலோ அல்லது பாலூட்டினாலோ நிறுத்தப்படமாட்டாது என்பதால் முதல் மூன்று மாத காலத்தில் அழுகையானது விளங்கப்படுத்த முடியாததாக இருக்கின்றது.

வித்தியாசமான அழுகைகள் வித்தியாசமான விடயங்களைக் குறிப்பிடுகின்றனவா?

வித்தியாசமான ஆரம்ப கால அழுகைகள் வித்தியாசமான விடயங்களை அர்த்தப்படுத்துகின்றனவா என்பதில் விஞ்ஞானிகளுக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ஆனால் குழந்தைகளின் அதிகரிக்கும் சுருதி அல்லது கடுமைத் தன்மையோடு கூடிய அழுகை பெரிய துயரம் ஒன்றின் அடையாளமே தவிர துல்லியமான காரணமல்ல என்ற விடயத்தில் ஒற்றுமை காணப்படுகிறது.

இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உங்கள் குழந்தையின் அழுகையின் சத்தத்தைவைத்து, குழந்தையின் தேவை என்ன என்பதை நீங்கள் சரியாக ஊகித்துவிடலாம். சுமார் மூன்று மாத வயதளவின்போது, வித்தியாசமான விடயங்களை காண்பிப்பதற்காக குழந்தை வித்தியாசமான அழுகைகளை உபயோகிக்கும். இந்த மாற்றம் குழந்தையின் விருத்தியடைந்துவரும் சமூகத் திறன்களுடன் ஒன்றுபடுகிறது. வித்தியாசமான அழுகைகளைப் பற்றி இதோ சில குறிப்புகள்

பசி

உங்கள் குழந்தையின் பசிக்கான அழுகை சத்தம் குறைந்ததாகவும் மெதுவாகவும் ஆரம்பிக்கலாம், அதனுடைய சத்தம் அதிகரிக்கலாம், இதன் பின்பு பெரிய சத்தமாகவும் சீராகவும் இருக்கும். அண்மையில் நீங்கள் குழந்தைக்குப் பாலூட்டி மற்றும் அவன் போதிய உணவு உட்கொண்டுவிட்டான் என்பதில் நிச்சயமில்லாதிருந்தால், குழந்தைக்குப் பாலூட்டிப் பாருங்கள்.

வலி

வலிக்கான அழுகையோ உயர்-சுருதி, உணர்ச்சி மேலிட்ட, கடுமையான, சீரற்ற, கூரிய, சுருக்கமான மற்றும் உரத்த சத்தமுள்ளதாக இருக்கும்.

இலகுவில் சினமடைதல்

உங்கள் குழந்தை குழப்பமடைந்திருக்கும்போது மென்மையாகவும் விட்டு விட்டும் அழுவான். அநேகமான குழந்தைகள், பொதுவாக மதியத்திற்குப் பின்னான நேரத்தில் அல்லது பின்நேரத்தின் முன்பகுதிகளில் “சிணுங்கள் நேரத்தை” கொண்டிருப்பார்கள். சிணுங்கள் அழுகையானது பசிக்கான அழுகையிலிருந்து வேறுபடுகிறது, ஆனால் பசிக்கான அழுகையைப்போலவே அது சத்தத்தில் அதிகரிக்கலாம். இந்த வகையான அழுகைக்கான சில காரணங்கள் பின்வருவனவற்றை உட்படுத்தலாம்:

  • உங்கள் பிள்ளை தான் தூக்கி வைத்திருக்கப்பட வேண்டுமென விரும்புகிறான். உங்கள் பிள்ளையை அமைதியாக்க பலன் தரும் ஒரு அணுகுமுறை இதுவாகும். புதிதாகப் பிறந்த குழந்தைகள் குறுகிய இடமொன்றில் இருந்து வெளியே வந்திருப்பதால் தொட்டிலில் காணப்படும் திறந்த வெளிபோன்ற நிலையைப் பார்த்து பயம் அடைகிறார்கள்.
  • ஈரமான அல்லது மலம் கழிக்கப்பட்ட டையப்பர் அசெளகரியத்திற்கு காரணமாக இருக்கலாம்.
  • உங்கள் குழந்தை களைப்படைந்திருக்கிறது. சிலவேளைகளில் உறக்கம் கொள்ள முடியாவிட்டால் குழந்தைகள் சினமடைந்து விடுகிறார்கள்.
  • உங்கள் குழந்தைக்கு அளவுக்கதிகமான அல்லது குறைந்த அளவிலான தூண்டுதல் காணப்படுகிறது. சூழமைவைப் பொறுத்து செயற்பாடுகளைக் கூட்டிக் குறைக்கவும் அல்லது இசை, வெளிச்சம் போன்றவற்றை கூட்டிக் குறைக்கவும்.

வாழ்வின் முதல் மூன்று மாதங்களின்போது சிணுங்கள் அழுகையானது மேலே குறிப்பிட்டபடி விளங்கப்படுத்த முடியாததாக இருக்கும் என்பதை நினைவில் வையுங்கள். பெற்றோர்கள் எதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் இந்த அழுகை தொடங்கி முடிவுக்கு வரும்.

அசாதாரணமான அழுகை

அதி உயர் சுருதியுள்ள அழுகை, சாதாரணமான சிசுவின் அழுகையைவிட மூன்று மடங்கு உயர்வானது, இது தொடர்கின்றபோது அல்லது சில சந்தர்ப்பங்களில் மிக குறைந்த சுருதியுள்ள அழுகை தொடர்கின்றபோது இது ஒரு தீவிர அல்லது நீடிக்கும் வருத்தத்துடன் தொடர்புடடையதாக இருக்கலாம். இந்த வகையான அழுகை சிசுக்களின் சாதாரண அழுகைகளிலிருந்து தெளிவாகவே வித்தியாசமானது. அத்துடன் கோலிக் என இனங்காணப்பட்டுள்ள அளவுக்கதிகமாக அழுகையிலிருந்து இது வேறுபட்டது.

Last updated: September 22 2009