சல்பியூட்டமோல் (Salbutamol) உட்சுவாசிப்பதன் மூலம்

Salbutamol by inhalation [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

உங்கள் பிள்ளை சல்பியூட்டமோல் என்றழைக்கப்படும் ஒரு மருந்தை உட்கொள்ளவேண்டும். சல்பியூட்டமோல் என்ன செய்கிறது, இதை எப்படி உட்கொள்ள வேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் த

உங்கள் பிள்ளை சல்பியூட்டமோல் என்ற மருந்தை உட்கொள்ளவேண்டும். சல்பியூட்டமோல் என்ன செய்கிறது, இதை எப்படி உட்கொள்ள வேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விளக்குகிறது.

இந்த மருந்து எப்படிப்பட்டது?

சல்பியூட்டமோல் மருந்து, நுரையீரலிலுள்ள சிறிய காற்று செல்லும் பாதைகளின் சுவர்களிலுள்ள தசைகளைத் தளர்த்துகிறது. இது காற்றுக் குழாய்களைத் திறக்கவும், மார்பு இறுக்கத்தைத் தளர்த்தவும், மூச்சு வாங்குதல், மற்றும் இருமலை நிவாரணமடையச் செய்யவும் உதவுகிறது. அதனால் உங்கள் பிள்ளை மேலும் இலகுவாக சுவாசிக்க முடியும். மூச்சுக் குழாய்த் தளர்த்தி அல்லது ஒரு நிவாரணி மருந்து என அழைக்கப்படுகிறது.

சல்பியூட்டமோல் மருந்து, விரைவான சுவாசம் மற்றும் உடற்பயிற்சி செய்யும்போது மூச்சு வாங்குதல், அதாவது, உடற்பயிற்சியால் தூண்டப்படும் ஆஸ்துமா என்பனவற்றைத் தடுக்கவும் உதவி செய்யும்.

சல்பியூட்டமோல் மருந்து அதன் வர்த்தகச் சின்னப் பெயர்களான, வென்டோலின்®, அல்லது ஏயாரோமின்®, என்பவற்றால் அழைக்கப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். சல்பியூட்டமோல் மருந்து மூச்சிழுப்புக் கருவியாக, மூச்சிழுப்பு உலர் பொடியாக ( அதாவது டிஸ்கஸ்), சுவாசித்தலை எளிதாக்கும் கரைசல், மற்றும் நெபுலே போன்ற வகைகளில் கிடைக்கும்.

இந்த மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதற்கு முன்பு...

உங்கள் பிள்ளைக்கு சல்ப்யூட்டமோல் மருந்துக்கு ஒவ்வாமை இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகளில் ஏதாவது இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் பேசவும். உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் இருந்தால் இந்த மருந்துடன் முன்னெச்சரிக்கைகள் எடுக்கவேண்டும்:

  • இதய அல்லது இரத்தக் குழாய் நோய்
  • தைரோயிடுக்கான அளவுக்கதிகமான சுறுசுறுப்பு ( ஹைப்பர் தைரோயிட்)
  • உயர் இரத்த அழுத்தம் ( ஹைப்பர்டென்சன்)
  • மிக விரைவான நாடித்துடிப்பு உட்பட ஒழுங்கற்ற இதயத் துடிப்பு அல்லது ஒழுங்கற்ற இதயச் சீர் துடிப்பு

உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை நீங்கள் எப்படிக் கொடுக்கவேண்டும்?

  • உங்கள் பிள்ளைக்கு இந்த மருந்தை, உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் குறிப்பிட்டபடி சரியாகக் கொடுக்கவும்.
  • நீங்கள் மருந்தின் அளவை மாற்றுவதற்கு முன்பு உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளருக்குத் தெரிவிக்கவும்.
  • உங்கள் பிள்ளையை சல்பியூட்டமோல் மருந்தை வாயால் சுவாசிக்கச் செய்யவும்.
  • உங்கள் பிள்ளைக்கு சல்பியூட்டமோல் மருந்தை எப்படிக் கொடுப்பது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் மருந்தாளர் அல்லது ஆஸ்துமா மருந்துவமனையிலிருக்கும் தாதியிடம் அதைக் காண்பித்துக் கொடுக்கும்படி கேட்கவும்.
  • உங்கள் பிள்ளைக்கு உடற்பயிற்சியினால் தூண்டப்படும் ஆஸ்துமா நோயிருந்தால், விளையாட அல்லது உடற்பயிற்சி செய்யப்போவதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பாக சல்பியூட்டமோல் மருந்தைக் கொடுக்கவும்.
  • உங்கள் பிள்ளை சல்பியூட்டமோல் மருந்தை, ஒரு தடுப்பு மருந்துடன் உபயோகிப்பவனா(ளா)க இருந்தால், சல்பியூட்டமோல் மருந்தை முதலில் உபயயோகிக்கவும். சல்பியூட்டமோல் மருந்து காற்றுக் குழாய்களைத் திறக்கும். அவை தடுப்பு மருந்தை நுரையீரலினுள் ஆழமாகவும் நன்றாகவும் உட்செல்ல அனுமதிக்கும்.
  • சல்பியூட்டமோல் மருந்து மற்றும் தடுப்பு மருந்து கொடுப்பதற்கும் இடையே 5 நிமிடங்கள் காத்திருக்கவும். 5 நிமிடங்கள் காத்திருப்பது காற்றுக் குழாய்களைப் போதியளவு திறக்கப்படச் செய்யும். அதன் மூலம் தடுப்பு மருந்து மேலும் நன்றாக உறிஞ்சப்படும்.
  • உங்கள் மருத்துவர் அல்லது ஆஸ்துமா தாதி, இலகுவாக உட்சுவாசிப்பதற்கு உதவியாக உட்சுவாசிக்கும் கருவியுடன் உபயோகிப்பதற்காக ஒரு ஸ்பேசர் கருவியைக் கொடுக்கலாம். இது மேலும் அதிகளவு மருந்து நுரையீரலுக்குட் செல்ல உதவி செய்யும்.

உங்கள் பிள்ளை வேளை மருந்து ஒன்றைத் தவறவிட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?

  • உங்களுக்கு ஞாபகம் வந்தவுடனேயே, தவறவிடப்பட்ட வேளை மருந்தைக் கொடுக்கவும்
  • அடுத்த வேளைமருந்துக்கான நேரம் நெருங்கிவிட்டிருந்தால், தவறவிட்ட வேளைமருந்தைக் கொடுக்காது விடவும். அடுத்த வேளைமருந்தை சரியான நேரத்தில் கொடுக்கவும்.
  • ஒரு தவறவிட்ட வேளைமருந்தை ஈடு செய்வதற்காக இரு வேளைமருந்துகளை ஒரே சமயத்தில் உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.

இந்த மருந்து வேலை செய்யத் தொடங்க எவ்வளவு காலம் செல்லும்?

உங்கள் பிள்ளை சல்ப்யூட்டமோல் மருந்தை உட்கொண்ட 5 முதல் 10 நிமிடங்களுக்குள் இலகுவாக சுவாசிக்கத் தொடங்க வேண்டும்.

இந்த மருந்தினால் சாத்தியமாகக்கூடிய பக்கவிளைவுகள் எவை?

உங்கள் பிள்ளை சல்பியூட்டமோல் மருந்தை உட்கொள்ளும்போது பின்வரும் சில பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது தொடர்ந்திருந்தால் மற்றும் அவை நிவாரணமடையாமலிருந்தால் அல்லது அவை உங்கள் பிள்ளைக்குத் தொந்தரவு கொடுத்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:

  • தலைவலி
  • நடுக்கம்
  • விரைவான, மந்தமான, அல்லது சீரற்ற இதயத் துடிப்பு
  • படபடப்பு அல்லது அமைதியின்மை
  • வாயில் கெட்ட சுவை
  • குமட்டல் அல்லது வாந்தி
  • வாய் உலர்தல் மற்றும் இருமல்
  • நித்திரை செய்ய இயலாமை
  • தொண்டை அல்லது வாயில் வலி மற்றும் விழுங்குவதில் கஷ்டம்

பின்வரும் பக்கவிளைவுகளில் பெரும்பாலானவை சாதாரணமானவையல்ல, ஆனால் அவை கடுமையான பிரச்சினைக்கு ஒரு அடையாளமாக இருக்கலாம். பின்வரும் பக்கவிளைவுகளில் ஏதாவது இருந்தால் உடனே உங்கள் பிள்ளையின் மருத்துவரை அழைக்கவும் அல்லது உங்கள் பிள்ளையை அவசர நிலைச் சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்:

  • பின்வருவன உட்பட, உங்கள் பிள்ளை உயிரை அச்சுறுத்தும் எதிர்விளைவுகளைக் காண்பித்தால்: மூச்சு வாங்குதல், மார்பு இறுக்கம், காய்ச்சல், அரிப்பு, மோசமான இருமல், தோல் நீல நிறமாக மாறுதல், முகத்தில், உதடுகளில், நாக்கில், அல்லது தொண்டையில் வீக்கம்; அல்லது வேறு வழக்கத்துக்கு மாறான செயல்களைக் காண்பித்தல்
  • உங்கள் பிள்ளையால் சுவாசித்தல் பாதிப்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாவிட்டால்
  • வலிப்பு நோய்கள்

உங்கள் பிள்ளை இந்த மருந்துகளை உட்கொள்ளும்போது என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் எடுக்கவேண்டும்?

மருத்துவமனையில் அல்லது மருத்துவரின் அலுவலகத்தில் எல்லா மருத்துவமனைச் சந்திப்புத் திட்டங்களுக்கும் ஆஜராகவும். அதன் மூலம் மருத்துவர், உங்கள் பிள்ளையின் சல்பியூட்டமோல் மருந்துக்கான எதிர்விளைவுகளைப் பரிசோதிக்கமுடியும். உங்கள் பிள்ளை சரியான அளவு மருந்தைப் பெற்றுக்கொள்வதற்காக மருத்துவர் மருந்தின் அளவை மாற்றக்கூடும்.

பின்வரும் எச்சரிக்கை அடையாளங்கள், உங்கள் பிள்ளையின் ஆஸ்துமா நோய் மோசமாகிக்கொண்டே போகிறது மற்றும் உங்கள் பிள்ளை மருத்துவரைச் சந்திக்கவேண்டும் என்பதைக் காட்டுகிறது:

  • இருமல், மூச்சு வாங்குதலில் தாக்கம், மார்பு இறுகுதல், அல்லது கடுமையான மூச்சு விட இயலாமை போன்ற அறிகுறிகள் மோசமாகிக்கொண்டே போகிறது அல்லது மேலும் அடிக்கடி சம்பவிக்கிறது.
  • உங்கள் பிள்ளை மார்பு இறுக்கம், மூச்சு வாங்குதல், அல்லது விரைவான சுவாசத்தினால் இரவில் விழித்தெழும்புகிறான்(ள்).
  • உங்கள் பிள்ளை ஆஸ்துமா நோயினால் பாடசாலை மற்றும் வேறு நடவடிக்கைகளைத் தவறவிடுகிறாள்.

சல்பியூட்டமோல் மருந்து போன்ற நிவாரண மருந்துகள் வீக்கத்தின் அடிப்படையான பிரச்சினைக்கு எதுவுமே செய்யாது. நிவாரணிகள், சுவாசித்தல் சம்பந்தமான பிரச்சினைக்கு ஒரு குறிகிய காலத் தீர்வு மாத்திரமே. உங்கள் பிள்ளை எவ்வளவு அடிக்கடி நிவாரணியை உபயோகிக்கிறான்(ள்) என்பதைக் கண்காணிக்கவும். அதிக முறைகள் உபயோகிப்பது ஆஸ்துமா நோய் மோசமடைகிறது மற்றும் உங்கள் பிள்ளைக்கு ஒரு தடுப்பு மருந்து தேவைப்படுகிறது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கிறது.

உங்கள் பிள்ளை ஒரு கோர்டிகொஸ்டெரொய்ட் அல்லது மூச்சுக்குழாய்த் தளர்த்தி (நிவாரணி)யையும் உபயோகித்தால் அவன்(ள்) இந்த மருந்துகளையும் தொடர்ந்து உபயோகிக்கவேண்டும்.உங்கள் மருத்துவர் இந்த மருந்துகளை நிறுத்தும்படி சொன்னாலன்றி, உங்கள் பிள்ளை நிவாரணமடைந்தவனா(ளா)கத் தோன்றினாலும் இவற்றை நிறுத்த வேண்டாம்.

வேறு மருந்துகளை (மருந்துக் குறிப்புள்ள, மருந்துக் குறிப்பில்லாத, மூலிகை மற்றும் இயற்கை மருந்துகள்) பிள்ளைக்குக் கொடுக்கு முன்பு பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் கலந்து பேசவும்.

நீங்கள் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை? இந்த மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதற்கு முன்பு…

ஆஸ்துமாவின் எச்சரிக்கை மற்றும் அபாய அறிகுறிகளை சல்பியூட்டமோல் தடுப்பதில்லை. வழக்கமாக உபயோகிப்பதற்கென மூச்சில் உள்வாங்கும் தடுப்பு மருந்து ஒன்றும் பிள்ளைக்கு எழுதிக் கொடுக்கப்படலாம்.

உங்கள் பிள்ளையின் மருந்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வேறொருவரின் மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.

வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், மற்றும் விடுமுறைச் சுற்றுலா நாட்கள் வரை நீடிக்கக்கூடிய, போதியளவு சல்ப்யூட்டமோல் மருந்தை எப்போது கைவசம் வைத்திருக்க நிச்சயமாயிருங்கள். உங்கள் பிள்ளையின் மருந்து தீர்ந்துபோவதற்கு 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, உங்கள் மருந்துக்கடையை அழைக்கவும்.

சல்பியூட்டமோல் மருந்துகளை அறை வெப்பநிலையில், குளிரான, உலர்ந்த இடத்தில் சூரியவெளிச்சம் படாமல் வைக்கவும். குளியலறை அல்லது சமயலறையில் வைக்கவேண்டாம்.

மூச்சில் உள்வாங்கும் கருவி/பஃபர் வெடித்துவிடும் என்பதால் சூடான இடங்களுக்கு அருகில் (அடுப்பு, சுடுநீர், ரேடியேட்டர் போன்ற) அதை வைக்கவேண்டாம்.

காலாவதியான எந்த மருந்துகளையும் வைத்திருக்கவேண்டாம். காலாவதியான அல்லது மீந்துபோன மருந்துகளை எறிந்து விடுவதற்கான மிகச் சிறந்த வழி என்ன என்பதை உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.

உங்கள் பிள்ளை அளவுக்கதிகமான சல்பியூட்டமோல் மருந்தை உட்கொண்டுவிட்டால், ஒன்டாரியோ பொய்சன் சென்டருக்கு பின்வரும் தொலைபேசி எண்களில் ஒன்றை அழைக்கவும். இந்த அழைப்புகள் இலவசமானவை:

  • நீங்கள் டொரொன்டோவில் வாழ்ந்தால் 416-813-5900 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவில் வேறெங்கேயாவது வாழ்ந்தால் 1-800-268-9017 ஐ அழைக்கவும்.
  • நீங்கள் ஒன்டாரியோவுக்கு வெளியே வாழ்ந்தால், உங்கள் உள்ளூர் பொய்சன் இன்ஃபொர்மேஷன் சென்டரை அழைக்கவும்.

பொறுப்புத்துறப்பு: இந்த குடும்ப மருத்துவ உதவியிலுள்ள தகவல்கள் அச்சிடும்வரை திருத்தமாக இருக்கிறது. இது சல்பியூட்டமோல் மருந்தைப் பற்றிய தகவல்களின் ஒரு சுருக்கத்தை அளிக்கிறது. ஆனால் இந்த மருந்தைப்பற்றிய சாத்தியமான எல்லாத் தகவல்களையும் கொண்டில்லை. எல்லாப் பக்கவிளைவுகளும் பட்டியலிடப்பட்டில்லை. சல்பியூட்டமோல் மருந்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் அல்லது மேலதிக தகவல்களைத் தெரிந்து கொள்ளவிரும்பினால், உங்கள் உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் பேசவும்.

Last updated: January 31 2010