தாய்ப்பால்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உங்கள் குழந்தைக்காக வெளியேற்றுதல்

Expressing breast milk for your hospitalized baby [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

தாய்மார்களால் தாய்ப்பாலை வெளியேற்றுதல் என்பது கைகளாலோ அல்லது மார்புப் பம்பு மூலமாகவோ வெளியேற்றப்படலாம்.

இந்தத் துண்டு வெளியீட்டிலுள்ள சிபாரிசுகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்காக தாய்ப்பாலை வெளியேற்றி மற்றும் சேகரித்து வைத்திருக்கும் தாய்மார்களுக்கானது.

தாய்ப்பாலை வெளியேற்றுதல் என்றால் ஏன்ன?

தாய்ப்பாலை வெளியேற்றுதல் அல்லது பம்ப் செய்வது என்பது, உங்கள் மார்பிலிருந்து ,மார்புப் பம்பு மூலமாகவோ அல்லது உங்கள் கைகளினாலோ தாய்ப்பாலை வெளியேற்றுவதாகும். பின்பு அந்தப் பாலை உங்கள் குழந்தைக்காக சேர்த்து வைக்கலாம்.

பின்வரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களுக்காக நீங்கள் தாய்ப்பாலை வெளியேற்ற வேண்டியிருக்கலாம்:

  • உங்கள் குழந்தை உங்கள் மார்பிலிருந்து தாய்ப்பால் குடிக்க முடியாதிருக்கும்போது பால் சுரப்பதை ஊக்குவிக்கவும் மற்றும் பேணிக்காக்கவும்
  • உங்களில் தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்க
  • அரிஓலா என்றழைக்கப்படும், உங்கள் முலைக்காம்பைச் சுற்றியிருக்கும் வட்டமான, நிறமான பகுதியை பற்றிப்பிடிப்பதில் உங்கள் குழந்தைக்கு கஷ்டமிருக்கலாம். உங்கள் முலைக்காம்பு தட்டையானதாயிருக்கலாம் அல்லது உள்வாங்கியிருக்கலாம். உங்கள் குழந்தையை அணைப்பதற்கு முயற்சி செய்வதற்கு முன்பாக, சிலநிமிடங்களுக்கு தாய்ப்பாலை வெளியேற்றுவது முலைக்காம்பு சிறிது வெளிவாங்குவதற்கு உதவி செய்யலாம்.
  • உங்கள் மார்பு கடினமானதாகவும் சௌகரியமற்றதாகவும் இருப்பதால், அதில் வேதனையுண்டாகலாம். இது இரத்த நாள வீக்கம் எனப்படும். தாய்ப்பாலை ஒழுங்காக வெளியேற்றுவதன் மூலம் கடினத்தன்மையை இலகுவாக்கலாம். இரத்த நாள வீக்கம் முலைக்காம்பை தட்டையானதாக்கும். தாய்ப்பாலை வெளியேற்றுவது இரத்தநாள வீக்கத்தை குறைத்து அரிஓலா பகுதியை மென்மையாக்கும். இது குழந்தை முலைக்காம்புடன் இணைந்துகொள்வதை இலகுவாக்கும்.

உங்கள் உடலில் எப்படி தாய்ப்பால் உண்டாகிறது?

தாய்ப்பால் சுரப்பதற்கு இரண்டு சுரப்பிகள் முக்கியமானவை. இந்தச் சுரப்பிகள் பால் சுரப்பியூக்கி மற்றும் பால் சுரப்பு இயக்கு நீர் என்று அழைக்கப்படுகின்றன.

பால் சுரப்பியூக்கி என்ற சுரப்பிதான் பாலை உண்டாக்குகிறது. உங்கள் உடலில் அதிகளவு பால் சுரப்பியூக்கி இருந்தால், நீங்கள் அதிக பாலை உண்டாக்குவீர்கள். பின்வரும் காரணிகளால், உங்கள் உடல் மேலதிக பால் சுரப்பியூக்கியை உண்டாக்கும்:

  • நீங்கள் தாய்ப்பாலை அடிக்கடி வெளியேற்றினால்
  • உங்கள் குழந்தைக்கு அடிக்கடி பாலூட்டினால்

பால் சுரப்பு இயக்கு நீர் என்ற சுரப்பி, உங்கள் மார்புகளிலிருந்து பால் வெளியே வர உதவி செய்கிறது. பால் சுரப்பு இயக்கு நீர், உங்கள் மார்புகளின் உயிரணுக்களைச் சுற்றியுள்ள தசைகளை இறுகச் செய்வதன் மூலம் பால் வெளியே அழுத்தியெடுக்கப்பட முடிகிறது. பால் மார்பிலிருந்து பிதுங்கி வெளியேறும் இந்த முறை லெட்-டவுன் எனப்படும்.

தாய்ப்பால் வெளியேறும்போது, பின்வருவன சம்பவிக்கலாம்:

  • உங்கள் மார்புகள் கூச்சமடையலாம்.
  • நீங்கள் தாய்ப்பாலை பம்ப் செய்யாவிட்டால் அல்லது உங்கள் குழந்தைக்குக் கொடுக்காவிட்டால் பால் முலைக்காம்பிலிருந்து கசியலாம் அல்லது சொட்டு சொட்டாக வடியலாம்.
  • உங்கள் கர்ப்பப்பையில் தசைப்பிடிப்பு அல்லது இறுக்கத்தை உணருவீர்கள்

இந்த அடையாளங்களை நீங்கள் உணராமல் அல்லது பார்க்காமல் இருந்தாலும் தாய்ப்பால் வெளியேறலாம்.

சில வகையான உணர்ச்சிகள் உங்கள் உடலில் பால் சுரப்பு இயக்கு நீரிந் அளவைக் குறைக்கலாம். உதாரணமாக, பின்வருவன சம்பவிக்கும்போது நீங்கள் அதிகளவு தாய்ப்பாலை வெளியேற்றவில்லை என்பதை அறிவீர்கள்:

  • கவலைப்படுதல்
  • களைப்பு
  • வேதனையில்
  • மன உளைச்சல்
  • பசி

இவை தற்காலிகமாக உங்கள் தாய்ப்பால் சுரத்தலை அடக்கி வைக்கலாம், ஆனால், உங்கள் குழந்தை நிவாரணமடை யும் வரை உங்கள் தாய்ப்பாலை தொடர்ந்து வெளியேற்றிக்கொண்டிருந்தால், தாய்ப்பால் சுரத்தல் அதிகரிக்கும்.

பம்ப் செய்யும் வேலையை நான் எப்போது ஆரம்பிக்கவேண்டும்?

உங்கள் குழந்தை பிறந்த நாளிலேயே அல்லது மருத்துவ ரீதியாக உங்களால் முடியும்போது

என்ன வகையான பம்பை நான் உபயோகிக்க வேண்டும்?

தாய்ப்பாலூட்ட முடியாத ஒரு குழந்தைக்கு, மருத்துவமனை தரத்தில் இரட்டை மின் மார்பு பம்புகளை நிறுவி தாய்ப்பாலைத் தொடர்ந்து கொடுக்க வேண்டும். இந்த மின் மார்புப் பம்புகள் ஒரே நேரத்தில் இரு மார்புகளையும் பம்ப் செய்யும்.

இவற்றின் உறிஞ்சுதலும் சுழற்சியும், முலைக்காம்பில் புண் ஏற்படாதவாறு உங்கள் மார்பு, தாய்ப்பாலை சுரக்க மிகச் சிறந்த உதவி செய்யுமாறு அமைக்கப்பட்டுள்ளது. சுழற்சி என்பது முலைக்காம்பு பம்பின் உள்ளே தள்ளப்பட்டு வெளியே எடுக்கப்படும் எண்ணிக்கையைக் குறிக்கிறது. இது குழந்தை தாய்ப்பலை உறிஞ்சி விழுங்கும் எண்ணிக்கைக்கு ஒத்ததாக இருக்கிறது.

இந்தப் பம்புகள் மற்றும் கிருமிகளை அழித்து சுத்தம் செய்யப்பட்ட பம்ப் கருவிப்பெட்டிகள், பெரும்பாலும் சிசுக்களைப் பராமரிக்கும் மருத்துவமனைகளில் கிடைக்கும். உங்கள் தாதியை அல்லது பாலூட்டும் நிபுணரைக் கேளுங்கள். மார்புப் பம்ப் கருவிகளை அநேகமான மருத்துவ மனைகள் வாடகைக்கு மற்றும்/அல்லது விக்கின்றன. பம்ப் செய்யும் ஒவ்வொரு தடவையும் சுத்திகரிக்கப்பட்ட கருவிகள் பாவிக்கப்படவேண்டும். இவை கையொப்பமிட்டுப் பெற்றுக்கொண்ட பின்பு, பாவனை முடிந்தபின் சுத்திகரிப்புக்காக திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்.

என்னுடைய உடல்நல காப்பீட்டுத் திட்டம், மருத்துவமனை தரத்தில் இரட்டை மின் மார்பு பம்புகள் இரவல் அல்லது பணம் கொடுத்து வாங்கும் செலவை ஏற்றுக்கொள்ளுமா?

சில தனிப்பட்ட மருத்துவ காப்பீட்டுத்திட்டங்கள், மார்பு பம்புகள் இரவல் அல்லது பணம் கொடுத்து வாங்கும் செலவை ஏற்றுக்கொள்ளும். உங்கள் காப்பீட்டுக் கம்பனிக்குக் கொடுப்பதற்காக ஒரு கடிதம் தரும்படி உங்கள் குழந்தையின் தாதியிடம் கேளுங்கள்.

நீங்கள் ஒரு மார்பு பின்பு மற்ற மார்பு எனவா அல்லது இரு மார்புகளையும் ஒரே சமயத்திலா பம்ப் செய்ய வேண்டும்?

இரு மார்புகளிலிருந்தும் தாய்ப்பாலை, ஒரே சமயத்தில் வெளியேற்றுவது மிகவும் சிறந்தது. இது இரட்டை பம்ப் செய்தல் என்று அழைக்கப்படும். இரட்டை பம்ப் செய்தல் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் மற்றும் அதிக பால் சுரக்க உதவி செய்யும். இரட்டை பம்ப் செய்தல், உங்கள் உடலில் தாய்ப்பால் சுரப்பு ஊக்கியின் அளவு அதிகமாகும் மற்றும் விரைவாகும். இரட்டைப் பம்புக்கு, பம்பில் இணக்கப்பட்டிருக்கும் இரு குழாய்களுடன் இணைக்க உங்களுக்கு 2 பம்ப் கருவிப்பெட்டிகள் தேவைப்படும்.

இரட்டைப் பம்ப் செய்தலில் நீங்கள் சௌகரியமாக உணராவிட்டால் ஒரு சமயத்தில் ஒரு மார்பை பம்ப் செய்யலாம். இது ஒற்றை பம்ப் செய்தல் எனப்படும். ஒரு குழாயில் இணைப்பதற்காக உங்களுக்கு ஒரு பம்ப் கருவிப்ப்பெட்டி மாத்திரம் தேவைப்படும். பம்பிலிருந்து ஒரு குழாயைக் கழற்றிவிட்டு மற்றத் துவாரத்தை வெள்ளை அடைப்பான் கொண்டு மூடி விடுங்கள். நீங்கள் பம்ப் செய்யும்போது நல்ல உறிஞ்சுதலை உணராவிட்டால் தாதியிடம் சரி பார்க்கும்படி சொல்லவும்.

ஒவ்வொரு முறையும் பம்ப் செய்ய அமரும்போது எவ்வளவு நேரம் பம்ப் செய்ய வேண்டும்?

இரட்டைப் பம்ப் செய்யும்போது 10 முதல் 15 நிமிடங்கள் வரை பம்ப் செய்யவும். ஒற்றை பம்ப் செய்யும்போது ஒவ்வொரு மார்புக்கும் 15 நிமிடங்கள் பம்ப் செய்யவும். அதிக அளவு தாய்ப்பால் சுரந்தால், விசேஷமாக தாய்ப்பால் சுரந்துகொண்டிருக்கும்வரை கூடுதல் நேரம் பம்ப் செய்யலாம்.

நான் எவ்வளவு அடிக்கடி பம்ப் செய்யவேண்டும்?

காலை 6:00 மணி முதல் நள்ளிரவு வரை, 2 முதல் 3 மணி நேரங்களுக்கு ஒரு முறையாக , 24 மணிநேரத்தில் மொத்தம் 7 முதல் 8 முறைகள் பம்ப் செய்ய முயற்சிக்கவும். உங்கள் உடல் இரவில் அதிகளவு தாய்ப்பால் சுரப்பு ஊக்கிகளை சுரக்கும். இரவில் விழித்திருந்தால் பம்ப் செய்யவும். இரவில் தொடர்ந்து நித்திரை செய்யக்கூடிய கால அளவு 6 மணி நேரமாகும். நீங்கள் தொடர்ந்து 6 மணி நேரத்துக்கும் மேலாக நித்திரை செய்தால் 2 முதல் 3 நாட்களில் தாய்ப்பால் சுரக்கும் அளவு குறையத் தொடங்கும்.

"என்னுடைய மார்பு நிறைந்துள்ளது என்ற உணர்வு வரும்வரை காத்திருக்கலாமா?"

"என்னுடைய மார்பு முழுமையாக நிறைந்துள்ளது என்ற உணர்வு வரும்வரை காத்திருந்தால் எனக்கு அதிக தாய்ப்பால் கிடைக்கும். இதை நான் ஏன் செய்யக்க்கூடாது?" இது ஒரு பொதுவான கேள்வி. ஆரம்பத்தில், பம்ப் செய்வதற்காக அமரும் நேரங்களில் அதிக நேர இடைவெளி இருந்தால், அதிக தாய்ப்பால் சுரக்கும் என்பது உண்மைதான். ஆயினும், பம்ப் செய்வதில் நீண்டநேர இடைவெளி மற்றும் மார்புகள் தூண்டப்படாதிருக்கும்போது தாய்ப்பால் கொடுக்கத் தேவையில்லை என்று உங்கள் உடல் சொல்லும். அதன் பின் தாய்ப்பால் சுரக்கும் செயல்பாடு குறைய ஆரம்பிக்கும். இதை நேர்மாறாக்குவதற்கு, ஒவ்வொரு 2 முதல் 3 மணி நேரத்துக்கொருமுறை பம்ப் செய்யவும். தொடர்ந்து 6 மணி இடவெளி விட்டு பம்ப் செய்வதை 24 மணி நேரத்தில், ஒரு முறைக்குமேல் செய்யாதிருக்க முயற்சி செய்யவும்.

உங்கள் மார்பை பம்ப் செய்வதை இலகுவாக்கும் வழிகள்

நீங்கள் பம்ப் செய்யத் தொடங்குவதற்கு முன்பாக:

  • பம்ப் செய்யும் அறையில் கிடைக்கும் சோப் மற்றும் தண்ணீர் அல்லது தண்ணீரில்லாத நோய்க்கிருமிகளை அழிக்கும் மருந்துகளால் உங்கள் கைகளை கழுவவும்.
  • கிருமிகள் நீக்கப்பட்ட தண்ணீரால் உங்கள் முலைக்காம்புகளைக் கழுவுங்கள்
  • அமைதியான மற்றும் தனிமையான இடத்தில் பம்ப் செய்யவும்.
  • உங்கள் பாதங்கள் சமமான தளத்தில் இருக்குமாறு சௌகரியமாக உட்காரவும். முன்பக்கமாக சற்று சாய்ந்து முதுகுப்பக்கமாக தலையணைகளை வைக்கவும். முன்பக்கமாகச் சாய்வது தாய்ப்பால் இலகுவாக முலைக்காம்புக்கு பாய்ந்து வர உதவி செய்யும்.

தாய்ப்பால் சுரக்க உதவுவதற்கு:

  • உங்கள் மார்பில் இளம் சூடான துணியை போடவும். இது அதிக இரத்தம் உங்கள் மார்பிற்குள் பாயச் செய்யும், இது தாய்ப்பால் சுரப்பதற்கு உதவி செய்யும்.
  • மார்பு முழுவதையும் மசாஜ் செய்யவும். உங்கள் நெஞ்சுப் பக்கமாக உங்கள் விரல் நுனிகளால் அழுத்தி வட்டவடிவில் தேய்க்கவும். மார்பின் ஓரத்தில் தொடங்கி முலைக்காம்பை நோக்கி அசைக்கவும்.
  • உங்கள் விரல்களின் நுனியால் முழு மார்பு முழுவதையும் மெதுவாகத் தடவவும். திரும்பவும், மார்பின் ஓரத்தில் தொடங்கி முலைக்காம்பை நோக்கி அசைக்கவும்.
  • முன்பக்கமாகச் சாய்ந்து மார்புகளைக் குலுக்கவும். இது தாய்ப்பால் முலைக்காம்பை நோக்கிப் பாய உதவி செய்யும்.
  • உங்கள் தாய்ப்பால் இலகுவாகப் பாய்கிறது மற்றும் உங்களுக்கு போதியளவு தாய்ப்பால் இருக்கிறதென்றால் இளம் சூடான துணி போடத் தேவையில்லை அல்லது முதலில் உங்கள் மார்பை மசாஜ் செய்யத்தேவையில்லை.
எலெக்ட்ரிக் மார்பகப் பம்ப்பு மார்பக மின்சார விசைச்செலுத்தியைப்   பெண் பயன்படுத்தல்
மார்பகப் பம்ப்பின் புனல் சரியாக வைக்கப்படும்போது புனலின் கழுத்தின் ஒரு பகுதிவரை, முலைக்காம்பு நீண்டுவரும்.

உங்கள் மார்புகளை பம்ப் செய்வதற்கு

  • முடிந்தளவு கிருமிகள அழித்துச் சுத்தம்செய்து வைத்திருக்கும் மார்புக் கருவிகளை ஒன்றாகச் சேர்த்து இணைக்கவும். முதல் முறை யாராவது செய்து காண்பித்துத் தரும்படி கேட்பதில் நிச்சயமாயிருங்கள்.
  • கருவிப்பெட்டியிலிருக்கும் கூம்பு வடிவ புனலை உங்கள் மார்பில் வைத்து முலைக்காம்பை மையப்படுத்தவும். இயந்திரத்தை இயக்கமுன், உறிஞ்சும் அமைப்பை மிகவும் தாழ்ந்த அமைப்பில் வைத்திருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அசௌகரியம் ஏற்ப்டாதவாறு, முலைக்காம்பு புனலின் உள்ளேயும் வெளியேயும் அசைவதை அனுமதிக்கும்வண்ணம், உறிஞ்சும் வேகத்தை மெதுவாக அதிகரிக்கவும். உங்கள் தாய்ப்பாலின் அளவை அதிகரிக்கவும் அதைத் தொடர்ந்து பேணவும் பம்ப் செய்வதை உயர்ந்த அளவில் வைக்கும்படி சிபாரிசு செய்யப்படுகிறது.
  • பம்ப் செய்வதை, அசௌகரியம் ஏற்படுத்தாத உறிஞ்சும் நிலையில் வைத்துக் கொள்வது முக்கியம். பம்ப் செய்வது உங்களுக்கு வேதனையை உண்டாக்கினால், உறிஞ்சும் அளவை மிகவும் தாழ்ந்த நிலைக்குக் கொண்டு வரவும். மின் தொடர்பைத் துண்டித்துவிடவும். உறிஞ்சியை விடுவிப்பதற்காகவும் மார்பிலிருந்து கருவிகளை அகற்றுவதற்காகவும் புனலின் கீழாக விரலை விடவும். முலைக்காம்பு புனலின் மையத்திலிருக்குமாறு சரி செய்யவும். பம்பின் இயக்கத்தைத் தொடங்கி, சௌகரியமாக உணரும் நிலை தொடரும்வரை உறிஞ்சும் வேகத்தை அதிகரித்துக்கொண்டே போகவும்.

நீங்கள் பம்ப் செய்யும்போது

  • நீங்கள் பம்ப் செய்யும்போது பம்பையோ அல்லது உங்கள் மார்பையோ பார்க்க முயற்சிக்க வேண்டாம். அதற்குப் பதிலாக உங்கள் குழந்தையை பற்றி சிந்தியுங்கள்.
  • உங்கள் மார்பை நீங்கள் பம்ப் செய்ய்யும்போது ஒவ்வொரு முறையும் எவ்வளவு தாய்ப்பால் வெளியேற்றுகிறீர்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அந்த அளவு எப்போதும் ஒரே அளவாக இருக்காது. உதாரணமாக, காலையில் நீங்கள் ஓய்விலிருக்கும்போது உங்களுக்கு அதிகளவு தாய்ப்பால் இருக்கலாம். அநேக பெண்கள் ஒரு மார்பை விட மற்ற மார்பிலிருந்து அதிக தாய்ப்பாலை பம்ப் செய்வார்கள்.

பம்ப் செய்வதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு

  • உறிஞ்சியை மிகவும் தாழ்ந்த நிலைக்குக் கொண்டு வந்து பம்பை நிறுத்தவும். உறிஞ்சியை விடுவிப்பதற்காக உங்கள் விரலை உள்ளே விடவும். மார்பிலிருந்து கருவிகளை அகற்றவும்.
  • கொஞ்சம் தாய்ப்பாலை எடுத்து மெதுவாக முலைக்காம்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள நிறமான பகுதியில் மெதுவாகத் தேய்க்கவும். முலைக்காம்பை காற்றில் உலர விடவும்.
  • உங்களுக்குத் தரப்பட்ட கிருமிகளை அழித்துச் சுத்தம் செய்யப்பட்ட போத்தல்களில் உங்கள் தாய்ப்பாலை ஊற்றி வைக்கவும்.
  • தாய்ப்பால் குளிரூட்டியில் உறைய வைக்கப்படும்போது விரிவடைவதற்காக போத்தலில் ஒரு அங்குல இடைவெளி விட ஞாபகமாயிருங்கள்.
  • உங்களுக்குத் தரப்பட்ட கம்பூட்டர் லேபிளை உங்கள் தாய்ப்பால் போத்தலில் ஒட்டி, நீங்கள் பம்ப் செய்த நேரம் மற்றும் திகதியை அதில் எழுதி வைக்கவும்.
  • உங்கள் யூனிற்றில் காட்டப்பட்டுள்ள இடத்தில் உங்கள் தாய்ப்பாலை வைக்கவும்.

பம்ப் குறிப்புப் புத்தகம் என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு, ஒவ்வொரு 24 மணி நேரங்களுக்கு உங்களுக்கு எவ்வளவு தாய்ப்பால் சுரக்கிறது என்பதைப் பதிவு செய்து வைக்கும் ஒரு தாள் இதுவாகும். ஒவ்வொரு முறையும் நீங்கள், உங்கள் மார்பை பம்ப் செய்யும்போது நீங்கள் பம்ப் செய்த தாய்ப்பாலின் அளவை பம்ப் செய்த மணி நேரத்தின் கீழ் எழுதிவைக்கவும். ஒவ்வொரு 24 மணி நேரங்களிலும் நீங்கள் பம்ப் செய்ததை கூட்டிக் கொள்ளவும். 24 மணி நேர கனவளவை பதிவு செய்துவைப்பது உங்கள் தாய்ப்பாலின் கனவளவில் ஏற்படும் அதிகரிப்பு மற்றும் குறைவை அறிந்துகொள்ள உதவும். உங்கள் தாய்ப்பாலின் கனவளவு குறையும்போது உதவிக்காகக் கேட்கவும்.

இங்கே பம்ப் குறிப்புப் புத்தகம் ஒன்றைத் தரவிறக்கம் செய்யுங்கள்

நான் எவ்வளவு தாய்ப்பால் பம்ப் செய்யும்படி எதிர்பார்க்க வேண்டும்?

முதல் சில நாட்களுக்கு, அநேக பெண்களுக்கு ஒவ்வொரு பம்ப் செய்யும் காலப்பகுதியில் ஒரு சில துளிகள் முதல் ஒரு சில தேக்கரண்டி தாய்ப்பால் வரையுமே பம்ப் செய்ய முடியும். முதல் சில நாட்களுக்கு உங்களால் எதையுமே பம்ப் செய்யமுடியவில்லை என்று கவலைப்படாதீர்கள். ஆனாலும் உங்கள் மார்பை ஊக்குவிப்பதற்காக, ஒரு நாளில் 7 முதல் 8 முறை வரை தொடர்ந்து பம்ப் செய்யவும்.

வழக்கமாக, உங்கள் குழந்தை பிறந்து 2 முதல் 4 நாட்களின்பின் தாய்ப்பாலின் கனவளவு அதிகரிக்கும். உங்கள் மார்பு தாய்ப்பால் சுரப்பதைத் தூண்டுவிப்பதற்காக, மார்பை ஊக்குவித்து அதை வெறுமையாக்க வேண்டும். உங்கள் குழந்தை பிறந்து 7 நாட்களில், 24 மணி நேரத்தில் 350 cc ( ஏறக்குறைய 12 அவுன்ஸ்கள்) மற்றும் 10 நாட்களில், 24 மணி நேரத்தில் 500cc (ஏறக்குறைய 17 அவுன்ஸ்கள்) தாய்ப்பாலும் சுரக்கப்படவேண்டும். பின்பு, 6 மாதங்களில், 24 மணி நேரத்தில் 800 cc ஆக தொடர்ந்து அதிகரிக்கும்.

இந்த அளவுக்கு உங்களால் பம்ப் செய்ய முடியவில்லை என்றால், பால் சுரப்பதை அதிகரிக்கச் செய்யக்கூடிய வழிகள் பற்றி, தயவு செய்து உங்கள் தாதி, மருத்துவர், அல்லது பாலூட்டுதல் சம்பந்தப்பட்ட ஆலோசகரிடம் கலந்து பேசவும். தாய்ப்பாலின் எந்த அளவானாலும் அது உங்கள் குழந்தைக்கு நன்மையளிக்கும் என்பதை ஞாபகதில் வைத்துக் கொள்ளுங்கள்.

பவர் பம்ப்பிங் என்றால் என்ன?

நீங்கள் உங்கள் பிள்ளைக்கு அருகாமையில் இருந்தால் அல்லது தூக்கிவைத்திருந்தால், சுரப்பிகள் தாய்ப்பாலை அதிகமாகச் சுரக்கவைக்கும். அநேக தாய்மார்கள் அதனால் அதிக தாய்ப்பாலை பம்ப் செய்வார்கள். இதைச் செய்வதற்கு வெவ்வேறு வழிகளுண்டு.

  • கங்காருப் பராமரிப்பு என்பது, உங்கள் குழந்தையை, டயபர் மாத்திரம் கட்டியபடி, செங்குத்தாக உங்கள் மார்புகளுக்கிடையே உங்கள் தோல்களுடன் சேர்த்துப் பிடித்துக் கொள்வது
  • உங்கள் கைகளில் குழந்தையைத் தூக்கி வைத்திருப்பது
  • உங்கள் குழந்தை இன்குபேற்றரில் இருக்கும்போது அவனைத் தொடுதல்
  • உங்கள் குழந்தக்குப் பக்கத்தில் இருந்துகொண்டு அவனைப் பார்த்துக் கொண்டிருத்தல்

குறைந்தது 20 நிமிடங்களாவது உங்கள் குழந்தையுடன் இருந்துவிட்டுப்போய் பம்ப் செய்யுங்கள். உங்கள் குழந்தையுடன் நீங்கள் மருத்துவமனையில் இருக்கும்போது ஒவ்வொரு 1 முதல் 2 மணி நேரங்களுக்கு ஒரு முறை நீங்கள் இதை தொடர்ந்து செய்யலாம். உங்கள் குழந்தை இருக்குமிடத்திலிருந்து தூரத்திலிருந்தால், புகைப்படம் அல்லது ஒரு படுக்கையைப் பக்கத்தில் வைத்துக்கொள்வது, அல்லது உங்கள் குழந்தையின் கம்பளியை உங்கள் தோளில் போட்டுக்கொள்வது, உங்கள் குழந்தையை உங்களுக்கு ஞாபகப்படுத்தும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உங்கள் குழந்தைக்காக வீட்டில் பம்ப் செய்தல்

என்னுடைய மார்பை பம்ப் செய்யும் கருவியை வீட்டில் எப்படிப் பராமரிப்பது?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உங்கள் குழந்தைக்காக நீங்கள் வீட்டில் பம்ப் செய்வதானால், ஒவ்வொருமுறையும் பம்ப் செய்தபின், பம்ப் செய்யும் கருவியின் எல்லாப் பாகங்களையும் சூடான சோப்நீரில் கழுவி நன்கு அலசி, ஒரு சுத்தமான துவாயில் வைத்து உலரவிடவும். ஒரு சுத்தமான துவாயால் மூடிவிடவும். உற்பத்தியாளரின் அறிவுரைப்படி பம்பின் எல்லாப் பாகங்களும் ஒரு நாளுக்கு ஒரு முறை கிருமிகளை அழித்துச் சுத்தம் செய்யப்படவேண்டும்.

என் தாய்ப்பாலை நான் எப்படி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லலாம்?

உங்கள் தாய்ப்பாலை குளிர்கலனில் வைத்து மருத்துவமனைக்குக் கொண்டுவாருங்கள். தாய்ப்பால் குளிரூட்டியில் வைக்கப்பட்டதாயிருந்தால், அது குளிர்ந்திருப்பதற்காக குளிர்கலனில் ஐஸ்க்கட்டிகளைப் போடவும்.

தாய்ப்பால் குளிரால் கட்டியாக்கப்பட்டிருந்தால் குளிர்கலனில் ஃபிரீஸர் பக்கை சேர்க்கவும். தாய்ப்பால் குளிரால் கட்டியாக்கப்பட்டிருந்தால் ஐஸ் கட்டிகளைச் சேர்க்கவேண்டாம். அது தாய்ப்பால் உருகுவதை துரிதப்படுத்தும்.

குளிரூட்டியில் வைக்கப்பட்ட அல்லது குளிரால் கட்டியாக்கப்பட்ட தாய்ப்பாலை எவ்வளவு நேரத்திற்கு வைத்திருக்கலாம்? தாய்ப்பலை எவ்வளவு நேரத்துக்கு கட்டிலருகே வைத்திருக்கலாம்?

வீட்டிலிருக்கும் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுவதைவிட இந்த வழிகாட்டி முறைகள் கண்டிப்பானவை.

தாய்ப்பாலை சேர்த்துவைத்தல்


எங்கேஎவ்வளபு காலத்துக்கு
குளிர்சாதனப்பெட்டியில்2 நாட்களுக்கு
1 கதவுள்ள குளிர்சாதனப்பெட்டியின் உறை நிலைப் பிரிவில்2 வாரங்களுக்கு
2 கதவுள்ள குளிர்சாதனப்பெட்டியின் உறை நிலைப் பிரிவில்3 மாதங்களுக்கு
ஆழ் உறைவுக்கலத்தில்6 மாதங்கள் அல்லது அதற்கு மேலாக
  • தாய்ப்பாலை மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட, கிருமிகளை அழித்துச் சுத்தம் செய்த போத்தலில் சேகரித்து வையுங்கள்
  • தாய்ப்பால் பிளாஸ்ரிக் பைகள் அல்லது கண்ணாடி கிளாஸ்களில் வைத்து சிக்கிட்ஸில் சேர்த்து வைக்கலாகாது.
  • உங்கள் தாய்ப்பாலை பம்ப் செய்தவுடனே உபயோகிக்க மாட்டீர்கள் என்றால் அதை குளிர்சாதனப்பெட்டி அல்லது ஆழ் உறைவுக்கலத்தில் உடனேயே வைக்கவும்.
  • உங்கள் தாய்ப்பாலை வெளியேற்றி குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்ட 48 மணி நேரத்துக்குள் உபயோகிக்கவும். 48 மணி நேரம் கடந்துவிட்டால், அதை எறிந்துவிடவும்.
  • உருகத்தொடங்கும், குளிரால் கட்டியாக்கப்பட்ட தாய்ப்பாலை 24 மணி நேரத்துக்குள் உபயோகிக்கவும். 24 மணி நேரம் கடந்துவிட்டால் அதை எறிந்துவிடவும்.
  • உங்கள் தாய்ப்பாலை குளிரால் கட்டியாக்க விரும்பினால், அதைப் பம்ப் செ​ய்த 24 மணி நேரத்துக்குள் குளிரால் கட்டியாக்கவும்.
  • தாய்ப்பால் சூடாக்கப்பட்டு 1 மணி நேரம் வரை படுக்கைக்குப் பக்கத்தில் வைக்கப்படலாம்.
  • ஏற்கனவே குளிரால் கட்டியாக்கப்பட்டு, உருகத்தொடங்கும் தாய்ப்பாலை திரும்பவும் குளிரால் கட்டியாக்க வேண்டாம்.
  • தாய்ப்பாலை ஒருபோதும் மைக்ரோவேவில் வைக்கவேண்டாம். இது சூடான புள்ளிகளை உருவாக்கி உங்கள் குழந்தையின் வாயில் தீப்புண்ணை உண்டாக்கும்.

கையினால் தாய்ப்பாலை வெளியேற்றுவது என்பது என்ன?

இது உங்கள் கைகளால் உங்கள் மார்பிலிருந்து தாய்ப்பாலை எடுக்கும் முறையாகும். இந்த முறையை நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பினால், தயவு செய்து, பாலூட்டும் ஆலோசகரை அழைக்கும்படி உங்கள் தாதியிடம் கேளுங்கள்.

கைப்பம்ப் எப்போது உபயோகிக்கப்படுகிறது?

தாயின் மார்பிலிருந்தே நன்றாகப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு எப்போதாவது பம்ப் செய்வதற்காக கைப்பம்ப் சிபாரிசு செய்யப்படுகிறது. அவற்றுக்கு மின்சாரம் தேவையில்லை.

முக்கிய குறிப்புகள்

  • தாய்ப்பாலை வெளியேற்றுதல் என்பது, உங்கள் மார்பிலிருந்து  மார்புப் பம்பு மூலமாகவோ அல்லது உங்கள் கைகளினாலோ தாய்ப்பாலை வெளியேற்றுவதாகும்
  • உங்கள் குழந்தை மார்பிலிருந்து தாய்ப்பால் குடிக்கமுடியாத நிலையிலிருக்கும்போது, தாய்ப்பால் சுரப்பதைத் தூண்டி அதைப் பேணி பாதுகாப்பதற்காக , மருத்துவமனை தரத்தில் இரட்டை மின் மார்பு பம்புகள் சிபாரிசு செய்யப்படுகிறது.
  • உங்கள் குழந்தைக்காக தாய்ப்பாலை குளிர்ச்சாதனப் பெட்டியில் வைக்கலாம் மற்றும் குளிரால் கட்டியாக்கி வைக்கலாம்.
Last updated: November 06 2009