குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகள் (SIDS)

Sudden unexpected infant death [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகள் (SID அறிகுறிகள்) பற்றியும், அதன் நிகழ் நிலை, சாத்தியமான காரணங்கள் மற்றும் அதை தடுப்பதற்கான வழிகள் உள்ளிட்டவற்றையும் படித்தறியுங்கள்.

குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகள் (SIDS) என்பது ஒரு வயதுக்கும் குறைவான வயதையுடைய குழந்தையின் திடீரென மற்றும் எதிர்பார்க்காத மரணம் ஆகும். இது முழுமையான உடற்பரிசோதனை மற்றும் பிரேதப் பரிசோதனையின் பின்பும் கண்டுபிடிக்கப்படாதிருக்கும் நிலைமையாகும். குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகள் சிலவேளைகளில் “தொட்டில் மரணம்” எனவும் அழைக்கப்படும். ஏனென்றால் குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகளினால் மரணமடையும் குழந்தைகள் அவர்களது தொட்டிலில் தான் இறந்திருக்கிறார்கள். ஆயினும், குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகளுக்குக் காரணம் தொட்டில்தான் என்று அறியப்படவில்லை.

1990 க்களில், தேசீய மற்றும் சர்வதேச பிரசாரங்கள் குழந்தைகளை மல்லாந்து நித்திரைகொள்ளவைக்கும்படி அவர்களது பெற்றோர்களுக்கு அறிவுரை கொடுத்தார்கள். இது குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகளின் மரண வீதத்தில் 50% சரிவை ஏற்படுத்தியது. இன்னும் ஐக்கிய அமெரிக்காவில், ஒரு மாத வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் மரணத்துக்குக் காரணமாக, குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகள் முன்னணியில் இருக்கிறது.

பெண் குழந்தைகளைவிட ஆண்குழந்தைகள் தான் குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகளுக்கான மிக உயர்ந்த ஆபத்திலிருக்கிறார்கள்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில், குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகளை உருவாக்குவதில், கறுப்பர் மற்றும் இந்திய வம்சாவளிக் குழந்தைகள், மற்றக் குழந்தைகளைவிட இரண்டு முதல் மூன்று மடங்கு உயர் ஆபத்திலிருக்கிறார்கள். குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகள், கோடை காலத்தை விட குளிர் காலங்களில் தான் மிகவும் சாதாரணமாயிருக்கும். குறைமாதப்பிரசவக் குழந்தைகள் மற்றும் எடை குறைவாகப் பிறந்த குழந்தைகள், மற்றும் பதின்ம வயதுத் தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகள் தான் மிகவும் அதிக ஆபத்திலிருக்கிறார்கள்.

குழந்தை புதிதாகப் பிறந்த காலப்பகுதியில் குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகளின் சம்பவங்கள் அரிதாக இருக்கும். ஆனால் முதல் மாதத்தின் பின்னர் அது அதிகரிக்கும். இரண்டு முதல் நான்கு மாத வயதில் குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகளின் மரணம் மிகவும் சாதாரணமாயிருக்கும். தொண்ணூறு சத வீத குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகளின் மரணங்கள் ஆறு மாத வயதளவில் சம்பவிக்கும்.

புதிதாகப் பிறந்த குழந்தைகளில் குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகள் அசாதாரணமாக இருந்தாலும் சற்று வயது கூடிய குழந்தைகளில் இது மிகப்பெரிய கவலைக்குரிய விஷயமாகும். எனவே பிறப்பு முதற்கொண்டு அவசியமான முன்னெச்சரிக்கைகளை எடுக்கவேண்டியது மிகவும் முக்கியம்.

குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகளைத் தடுப்பதற்கான சிபாரிசுகள்

குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகளுக்கான நியாயமான காரணம் இது வரை அறியப்படவில்லை. ஆனால் குப்பறப் படுத்து நித்திரை செய்தல், புகை பிடிப்பவர்களிடமிருந்து வரும் புகை, அளவுக்கதிகமான சூடு, குறைமாதப் பிரசவம், எடை குறைவாகப் பிறத்தல், மற்றும் தாய்மாரின் இளம் வயது போன்ற பெரும் எண்ணிக்கையான ஆபத்தான காரணிகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகளைத் தடுக்கும் வழியாக, பெரும் எண்ணிக்கையான சிபாரிசுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

குழந்தை உறங்கும் நிலைதொட்டில் ஒன்றில் குழந்தை நிமிர்ந்து படுத்திருத்தல்
முதல் 6 மாதங்களுக்கு குழந்தைகள் மல்லாக்கப் படுப்பதே அவர்களுக்கு சிறந்ததாகும்.

நேராகப் படுத்து நித்திரை செய்தல்

ஒரு குழந்தையைக் குப்புறப் படுத்து நித்திரை கொள்ள வைப்பது, குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகளுக்கான மிக உயர்ந்த ஆபத்துக்கு வழி நடத்தும் என பெரும் எண்ணிக்கையான ஆய்வுகள் காண்பிக்கின்றன. இதன் விளைவாக, 1992 இல், குழந்தைகள் மல்லாந்து படுத்து நித்திரைகொள்ளச் செய்யவேண்டும் என தி அமெரிக்கன் அக்கடமி ஒஃப் பீடியாற்றிக்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

ஒரு குழந்தையைத் தனது பக்கமாகப் படுத்து நித்திரைகொள்ளவைக்கும்போதுள்ள, குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகளுக்கான ஆபத்து, குப்புறப் படுத்து நித்திரை கொள்ளவைக்கும்போதுள்ள ஆபத்தைவிடக் குறைவானது. ஆனால் இது, மல்லாந்து படுத்து நித்திரை செய்யவைக்கும்போதுள்ள ஆபத்தைவிட மிகவும் அதிகமானது. ஒரு குழந்தையை தனது பக்கமாகப் படுக்கவைக்கும்போதுள்ள பிரச்சினை என்னவென்றால், அவன் இலகுவாக உருண்டு குப்புறப் படுத்து நித்திரை கொள்வான்.

தங்கள் குழந்தையை மல்லாந்து படுத்து நித்திரை செய்யவைக்கும்போது மூச்சுத்திணறல் அல்லது எச்சில் உமிழ்தலுக்கான வாய்ப்பு அதிகரிக்கும் எனச் சில பெற்றோர்கள் கவலைப்படுகிறார்கள். மல்லாந்து படுத்து நித்திரை செய்யும் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறலில் அதிகரிப்பு இல்லை என உறுதி செய்யப்படுகிறது.

வழக்கமாக மல்லாந்து படுத்து நித்திரை செய்யும் குழந்தைகள், ஆனால் எப்போதாவது குப்புறப் படுத்து நித்திரை செய்பவர்கள், வழக்கமாகக் குப்புறப் படுத்து நித்திரை செய்யும் குழந்தைகளை விட குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகளுக்கான அதிகளவு ஆபத்திலிருக்கிறார்கள். அதாவது நீங்கள் உங்கள் குழந்தையைத் தொடர்ந்து விடாப்பிடியாக, மல்லாந்து படுத்து நித்திரை செய்யவைத்தாலும், உங்கள் குழந்தை பராமரிப்பாளர் அவனை அவனைக் குப்புறப் படுத்து நித்திரை செய்யவைக்கத் தீர்மானித்திருக்கலாம். அதனால் அவன் குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகளுக்கான உயர் ஆபத்திலிருப்பான். எல்லாப் பராமரிப்பளிப்பவரும் குழந்தைப் பராமரிப்பாளர்களும் உங்கள் குழந்தையை மல்லாந்து படுக்க வைக்கவேண்டும் என அறிந்திருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள் இது இரவு நேர நித்திரைக்கு மாத்திரமல்ல குட்டித் தூக்கம்போடும் நேரங்களுக்கும் பொருந்தும்.

மென்மையான மெத்தைகள், படுக்கைகள், மற்றும் தலையணைகளைத் தவிர்க்கவும்

மென்மையான மெத்தைகள், படுக்கைகள், மற்றும் தண்ணீர்ப் படுக்கைகள் போன்றவை உங்கள் குழந்தை நித்திரை செய்வதற்குப் பாதுகாப்பற்றவை. மென்மையான படுக்கைகள் மற்றும் தலையணைகள் உங்கள் குழந்தையின் மூக்கு மற்றும் வாயை அடைத்துவிடும். எனவே அது அவன் சுவாசிப்பதில் குறுக்கிட்டு குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகளை ஏற்படுத்தலாம். மென்மையான படுக்கையில் உங்கள் குழந்தையை முகம் கீழாக இருக்கக் குப்புறப் படுக்கவைப்பது விசேஷமாக ஆபத்தானது. உங்கள் குழந்தை நித்திரை செய்யும்போது மென்மையான பொருட்களான குவில்ற்றுகள், கம்ஃபோட்டர்கள், அல்லது செம்மறியாட்டுத் தோல் போன்றவற்றை அவனுக்குக் கீழே வைக்கவேண்டாம். தலையணைகள், பஞ்சடைக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்கள், மற்றும் வேறு மென்மையான பொருட்களை அவன் நித்திரை செய்யும் சுற்றாடலில் வைக்கவேண்டாம். சிறுமெத்தைகள் மற்றும் தளர்ந்த படுக்கைகளைத் தவிர்க்கவும்.

பொருத்தமான போர்வையினால் இறுக்கிச் சுற்றி மூடப்பட்ட ஒரு உறுதியான தொட்டில் மெத்தையை உபயோகிக்கவும். நீங்கள் ஒரு கம்பளிப் போர்வையை உபயோகிப்பதாக இருந்தால், அது உங்கள் குழந்தையின் முகத்தை மூடிவிடாதவாறு, அதைத் தொட்டில் மெத்தையைச் சுற்றி இறுகக் கட்டிவிடவும்.

புகை பிடிக்கவேண்டாம்

கர்ப்ப காலத்தில் புகை பிடிப்பது ஒரு குழந்தையை, குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகளுக்கான ஆபத்தில் விளைவடையச் செய்யும். ஒரு குழந்தை பிறந்த பின்னர் பிறர் மூலமாக புகையுடன் தொடர்பு கொண்டிருந்தாலும் நோய்க்கான ஆபத்து அதிகரிக்கும். உங்கள் குழந்தையை புகை இல்லாத சுற்றுச்சூழலில் வைத்துக்கொள்ளவும்.

அளவுக்கதிகமான சூட்டைத் தவிர்க்கவும்

அளவுக்கதிகமான சூடு குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகளின் ஆபத்தை அதிகரிக்கலாம். உங்கள் குழந்தைக்கு அளவுக்கதிகமான சூட்டைத் தவிர்க்கவும். நித்திரைக்காக அவனுக்கு மெல்லிய உடைகளை உடுத்தவும். மெல்லிய உடை உடுத்திய ஒரு பெரியவருக்குச் சௌகரியமான வெப்பநிலையில் அவனது அறை இருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தையைத் தொடும்போது அவனில் சூடு உணரப்படக்கூடாது.

குழந்தையை உங்கள் அறையில் வைத்துக்கொள்ளுங்கள்

ஒரு பெற்றோர் அல்லது வேறு முதிர்ந்த பராமரிப்பாளர் ஒரு குழந்தையைப்போல அதே அறையில், ஆனால் வேறு படுக்கையில் நித்திரை செய்யும்போது குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகளின் ஆபத்து 50% ஆகக் குறைகிறது. ஒரு தனி அறையில், பெரியவர்கள் எவரும் இல்லாது தனியாக நித்திரை செய்யும் குழந்தைகளுக்கு குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகளின் ஆபத்துக்கள் சம்பவிக்கின்றன. குழந்தையை அதன் சகோதரன் அல்லது சகோதரி இருக்கும் அதே அறையில் கிடத்துவது ஆபத்தை குறைக்காது.

குறைமாதப் பிரசவம் மற்றும் எடை குறைவாகப் பிறந்த குழந்தைகள்

‘நித்திரைக்குத் திரும்புதல்’ திட்டம் இருப்பினும், மருத்துவமனை சிறுவர் இல்லங்களிலுள்ள, அநேக உடல்நலப் பராமரிப்பளிப்பவர்கள் குறைமாதப் பிரசவம் மற்றும் எடை குறைவாகப் பிறந்த குழந்தைகளைத் தொடர்ந்து குப்புற அல்லது ஒரு பக்கமாகப் படுக்க வைக்கிறார்கள். இது ஏனென்றால், இந்தக் குழந்தைகள் இப்படிப்பட்ட நிலைகளில் இலகுவாகச் சமாளித்துக் கொள்வார்கள், மற்றும் புதிதாகப் பிறந்திருக்கும் சமயத்தில் குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகளுக்கான ஆபத்தும் மிகவும் குறைவானதாக இருக்கிறது. மேலுமாக, இந்தக் குழந்தைகள் பெரும்பாலும் பிரச்சினைகளை இலகுவாகக் கண்டுபிடிக்கக்கூடிய ஒரு கண்காணிப்புக் கருவியுடன் இணைக்கப்பட்டிருப்பார்கள். ஆயினும் பெற்றோர்கள் தங்கள் மருத்துவரின் வழிகாட்டுதலைப் பின்பற்ற விரும்புவார்கள். அவர்களது குழந்தை வீட்டுக்கு வந்ததும் அவனைத் தொடர்ந்து குப்புற அல்லது ஒரு பக்கமாகப் படுக்க வைப்பார்கள். குறைமாதப் பிரசவம் மற்றும் எடை குறைவாகப் பிறந்த குழந்தைகள் உட்பட எல்லாக் குழந்தைகளும் மருத்துவமனையில் அல்லது வீட்டில் முடிந்தளவு விரைவில் மல்லாந்து படுக்கவைக்கப்படவேண்டும் என ஏராளமான குழந்தைகளுக்கான சங்கங்கள் பரிந்துரை செய்கின்றன.  உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை விசேஷ பராமரிப்பு சிறுவர் இல்லம் அல்லது நியோனேடல் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தால், மற்றும் அவன் குப்புற அல்லது ஒரு பக்கமாக நித்திரைக்காகப் படுக்க வைக்கப்பட்டுள்ளான் என நீங்கள் கவலையடைந்தால் அவனது உடல்நலப் பராமரிப்பளிப்பவருடன் அதைப் பற்றிக் கலந்து பேசுவதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.

குப்புறப் படுக்கும் நேரம்

மல்லாந்து படுக்க வைக்கப்படும் குழந்தைகளுக்குச் சில சமயங்களில் தலையின் பின்பகுதி தட்டை வடிவமானதாகும். உங்கள் குழந்தை ஒவ்வொரு நாளும் அவன் விழித்திருக்கும்போது, குறைந்தது ஐந்து நிமிடங்களாவது குப்புறப் படுக்க வைக்கப்பட்டால், மற்றும் அவன் நித்திரை கொள்ளாதிருக்கும் நேரங்களில் அவனைச் செங்குத்தாகத் தூக்கிவைத்திருந்தால் இதைத் தவிர்க்கலாம். அத்துடன், அவனை நீங்கள் நித்திரை கொள்ளச் செய்யும்போது அவனது தலையை வேறுபட்ட நிலைக்கு ஒவ்வொரு முறையும் மாற்றவும்.

குழந்தையின் திடீர் மரண நோயை சமாளித்தல்

குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகளினால் பாதிக்கப்படும் குழந்தைகள் முன்னெச்சரிக்கை அல்லது மருத்துவ விளக்கங்கள் எதுவுமில்லாது இறந்து போகிறார்கள். இதன் விளைவாக, அவர்களது பெற்றோர்கள் ஒரு குழந்தையை இழந்தினால் உண்டான சகிக்கமுடியாத துக்கம் மற்றும் பாரிய குற்ற உணர்வு இரண்டையுமே சந்திக்கிறார்கள். அவர்கள் தங்களை மாத்திரமல்ல அவர்களுக்கு நெருக்கமான மற்றவர்களையும் நிந்திக்கிறார்கள். குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகளினால் இறந்து போன ஒரு குழந்தை உங்களுக்கு இருந்தால், உங்களையோ அல்லது மற்றவர்களையோ குற்றம் சாட்ட முயற்சிக்காதீர்கள். குழந்தையின் திடீர் மரண நோயின் கூட்டறிகுறிகளின் ஆபத்துக்களைக் குறைக்க வழிகள் இருந்தாலும் அது மேலும் சம்பவிக்கும், மற்றும் அதற்கு அறியப்பட்ட காரணங்கள் ஏதுமில்லை. 

ஒரு குழந்தையை இழப்பதினால் உண்டாகும் துக்கத்தை மேற்கொள்ள முடியும். நீங்கள் மரத்துப்போதல், அல்லது கோபத்தால் மறுப்புத் தெரிவித்தல் அல்லது மனச்சோர்வு போன்ற அநேக வித்தியாசப்பட்ட உணர்வுகளை அனுபவிக்கலாம். நீங்களும் உங்கள் துணைவரும் வித்தியாசமான வழிகளில் துக்கத்தை அனுபவிக்கலாம். இது உங்கள் உறவில் நிலைகுலைவை ஏற்படுத்தக்கூடும்.

Last updated: October 18 2009