காயங்களைப் பராமரித்தல்

Wound care [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

நீங்கள் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் சென்றவுடனேயே உங்கள் பிள்ளையின் காயத்தை பராமரிப்பதற்கு இந்தத் தகவல்கள் உதவி செய்யும்.

நீங்கள் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குச் சென்றவுடனேயே உங்கள் பிள்ளையின் காயத்தை பராமரிப்பதற்கு இந்தத் தகவல்கள் உதவி செய்யும்.

காயம் எப்படி ஆற்றப்பட்டது?

உங்கள் மருத்துவர் அல்லது தாதியுடன் பின்வரும் பகுதியை சரிபார்த்து, பொருத்தமானவற்றை நிரப்பவும். உங்கள் பிள்ளையின் காயம் பின்வருவனவற்றால் சரிசெய்யப்பட்டது

  • வழக்கமான தையல்கள் (தையல்களின் எண்ணிக்கை:_____)
  • மறைந்து போகும் அல்லது கரைந்து போகும் தையல்கள் (தையல்களின் எண்ணிக்கை:_____)
  • தைப்புக் கம்பிகள் (தைப்புக் கம்பிகளின் எண்ணிக்கை:_____)
  • ஒட்டும் பசை
  • ஒட்டும் தன்மையுள்ள சிறு பட்டை (கிருமிகள் அழிக்கப்பட்ட பட்டைகள்)
  • சரி செய்தலோ அல்லது மூடுதலோ தேவைப்படவில்லை

தையல்கள் (வழக்கமான அல்லது கரையக்கூடிய) அல்லது தைப்புக்கம்பிகளிடப்பட்ட காயங்களைப் பராமரித்தல்

காயத்தை மூடப்பட்டதாயும், சுத்தமாயும், மற்றும் உலர்ந்ததாயும் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளையின் காயம் முழுமையாக கட்டுப்போட்டு மூடப்பட்டதாக _____ நாட்களுக்கு வைக்கவும். அதன் பின்பு, உங்கள் பிள்ளை நடமாடும்போது காயத்தைப் பாதுகாப்பதற்காக மருந்துக்கட்டுப்போட விரும்பலாம். ஆனால், உங்கள் பிள்ளை வீட்டில் ஓய்வெடுக்கும்போது அல்லது நடமாடாது இருக்கும்போது கட்டை அவிழ்த்து காயத்தை திறந்தநிலையில் வையுங்கள்.

உங்கள் மருத்துவரின் கட்டளைப்படி, 1 அல்லது 2 நாட்களில் மருந்துக்கட்டை மாற்றவேண்டி வரலாம். மருந்துக்கட்டை மாற்றுவது என்பது அழுக்கான மருந்துக்கட்டை நீக்கிவிட்டு புதிய மருந்துக்கட்டு போடுதல் ஆகும். அன்டிபையோட்டிக் களிம்பை (பொலிஸ்பொரின் போன்ற கிருமிகளைக் கொல்லக்கூடிய மேற்பூச்சு மருந்துகள்) கூட, 7 நாட்களுக்கு அல்லது அதற்கு மேலாக, ஒரு நாளில் 2 தடவைகள் வீதம் தடவ வேண்டியிருக்கலாம். இது காயத்தையும் மற்றும் மருத்துவரின் ஆலோசனையையும் பொறுத்திருக்கும்.

அன்டிபையோட்டிக் களிம்பை கொள்கலனிலிருந்து அழுத்தி எடுக்கும்போது களிம்பு மாசுபடுவதை தவிர்ப்பதற்காக அசுத்தமான கைகளால் கொள்கலனைத் தொடாதிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்குப் பதிலாகப் பஞ்சு முனைக் குச்சியை அல்லது பஞ்சுருண்டையை உபயோகிக்கவும்.

காயங்களைக் கழுவுதல்

_____நாட்களுக்குப் பிறகு, காயத்தை மென்மையான சோப்பு மற்றும் தண்ணீரால் மெதுவாகக் கழுவலாம். காயம் கழுவுவதற்கு பாதுகாப்பானதாக இருக்கும்போது ஒரு நாளில் 1 அல்லது 2 தடவைகள் மாத்திரம் கழுவவும். காயத்தை தேய்க்கவோ அல்லது ஊறவிடவோ வேண்டாம்.

குளிப்பாட்டுதல்

காயத்தில் தண்ணீர் படுமாயிருந்தால் உங்கள் பிள்ளையை குளிப்பாட்ட வேண்டாம். உங்கள் பிள்ளையை குளியல் தொட்டியிலோ அல்லது ஷவருக்குக் கீழோ நிற்க வைத்துவிட்டு ஒரு ஈரத் துவாலையால், உடலின் காயமில்லாத மற்றப் பாகங்களை துடைப்பது இலகுவாயிருக்கும். காயம் ஆறி வரும்போது ஷவர் குளியலைத் தெரிவு செய்யலாம்.

தையல்கள் அல்லது தைப்புக் கம்பிகளை அகற்றுதல்

உங்கள் பிள்ளையின் காயத்துக்கு வழக்கமான தையல் அல்லது தைப்புக் கம்பிகள் போடப்பட்டிருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் _____ நாட்களில் அதை அகற்றிவிடுவார். உங்கள் பிள்ளைக்கு கரைந்து போகும் தையல் இழைகள் போடப்பட்டிருந்தால், அவை அகற்றப்படத் தேவையில்லை. அவை _____ நாட்களின் பின் தாமாகவே கரைந்து அல்லது உருகிப்போய்விடும்.

ஒட்டும் பசையால் ஒட்டப்பட்ட காயத்தைப் பராமரித்தல்

ஒட்டும் பசையை உரித்தெடுக்க வேண்டாம். காயத்தைத் தேய்க்கவேண்டாம்.

காயத்தை தண்ணீரில் ஊறவிட வேண்டாம். குறைந்தது 7 நாட்களுக்காவது உங்கள் பிள்ளை நீச்சலடிக்கக் கூடாது.

ஒட்டும் பசை உரிந்து கிழே விழும்வரை எந்தக் களிம்பையுமோ அல்லது மேற்பூச்சையுமோ பூச வேண்டாம். ஓட்டும் பசை 5 முதல் 14 நாட்களுக்குள் விழுந்துவிட வேண்டும்.

காயத்தை மருந்துக் கட்டுப் போட்டுக் கட்டவேண்டிய அவசியமில்லை. ஆனால் சில பெற்றோர்கள், பிள்ளைகள் ஒட்டும் பசையை பிரித்தெடுக்காதிருப்பதற்காக மருந்துக் கட்டு போடலாம். ஒட்டும் பசை உரிந்து விழுந்த பின்பு உங்கள் பிள்ளை மருத்துவரைப் போய் சந்திக்கவேண்டிய அவசியமில்லை.

குளிப்பாட்டுதல்

காயத்தில் தண்ணீர் படுமாயிருந்தால் உங்கள் பிள்ளையை குளிப்பாட்ட வேண்டாம். உங்கள் பிள்ளையை குளியல் தொட்டியிலோ அல்லது ஷவருக்குக் கீழோ நிற்க வைத்துவிட்டு ஒரு ஈரத் துவாலையால், உடலின் காயமில்லாத மற்றப் பாகங்களை துடைப்பது இலகுவாயிருக்கும். காயம் ஆறி வரும்போது ஷவர் குளியலைத் தெரிவு செய்யலாம். குளிப்பாட்டியபின் காயத்தை ஒரு துவாலையால் ஒற்றி உலர்த்தலாம்.

ஒட்டும் தன்மையுள்ள சிறு பட்டைகளினால் (கிருமிகள் அழிக்கப்பட்ட பட்டைகள்) சிகிச்சை அளிக்கப்பட்ட உங்கள் பிள்ளையின் புண்ணை பராமரித்தல்

பட்டை தோலை விட்டு இயற்கையாக உரிந்து வரும் சமயத்தில் அதன் ஓரங்களை நீங்களை கத்தரித்து விடலாம். 7 நாட்களுக்குப் பின்பும் பட்டைகள் உரியாமலிருந்தால் தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம் அவற்றை நீங்கள் வீட்டிலேயே அகற்றி விடலாம். பட்டைகள் அகற்றப்பட்டபின்பு உங்கள் பிள்ளை மருத்துவரைப் போய் சந்திக்க வேண்டிய அவசியமில்லை.

குளிப்பாட்டுதல்

காயத்தை ஊற வைக்கவோ அல்லது தேய்க்கவோ வேண்டாம். உங்கள் பிள்ளை ஷவரில் குளிக்கலாம். அதன் பின் ஒரு துவாலையால் ஈரத்தை ஒற்றி எடுக்கலாம். உங்கள் பிள்ளை 7 நாட்களுக்கு நீச்சலடிக்கக் கூடாது.

மருத்துவ உதவியை எப்போது நாடவேண்டும்

உங்கள் பிள்ளையின் காயம் ஆறிவரும்போது, அதன் ஓரங்கள் மெல்லிய இளஞ் சிவப்பு நிறமாக மாறும். இது சாதாரணம்.

பின்வரும் நிலைமைகளின்போது உங்கள் பிள்ளையை வழக்கமான மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள் அல்லது உங்களுக்கு மிக அருகிலிருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்லுங்கள்:

  • உங்கள் பிள்ளையின் புண் சிவந்து, வலியுள்ளதாக, அல்லது வீக்கமுள்ளதாக இருக்கிறது.
  • உங்கள் பிள்ளையின் காயத்திலிருந்து மஞ்சள் அல்லது பச்சை நிறத் திரவம் வெளியேறுகிறது.
  • உங்கள் பிள்ளைக்கு அடுத்த 72 மணி நேரத்தில் காய்ச்சல் உருவாகிறது.
  • உங்கள் பிள்ளையின் காயம் திறந்து இரத்த ஒழுக்கு ஏற்படுகிறது.

உங்கள் பிள்ளையின் காயம் ஆறியபின் வடுக்களைப் பராமரித்தல்

பெரும்பாலான காயங்கள் சிறிய அளவிலாவது தோலில் வடுக்களை ஏற்படுத்தும். காயமேற்பட்ட இடமும் அளவும், தோலின் மாதிரி, வயது, நோய்த்தொற்று, புகைத்தல், மற்றும் தற்போதிருக்கும் நோய்கள் அல்லது தோலின் நிலைமை போன்ற பல காரணங்களால் வடு உண்டாதல் பாதிக்கப்படுகிறது. உங்கள் பிள்ளையின் காயம் ஆறிய பின் , முதல் சில மாதங்களுக்கு வடு தடிப்பானதாகத் தோன்றலாம். பின் 6 முதல் 18 மாதங்களில் வடுவின் தோற்றம் மாறிக்கொண்டே வரலாம்.

காயம் ஆறியவுடன், பின்வரும் காரியங்களைச் செய்வதன் மூலம் வடுவின் கடைசித் தோற்றத்தை முடிந்தளவுக்குக் குறைக்கலாம்:

  • உங்கள் பிள்ளையின் வடுவை சூரிய ஒளி நேரடியாகப்படும்படி வைக்கவேண்டாம். காயத்தை துணியால் மூடி வைப்பதன் மூலம், நிழலில் தங்குவதன் மூலம், அல்லது சூரிய வெளிச்சத் தடுப்பை உபயோகிப்பதன் மூலம் இதை நீங்கள் செய்யலாம்.
  • விட்டமின் E கிரீம் போன்ற ஈரப்பதமாக்கும் ஒரு கிரீமை வடுவில் ஒரு நாளைக்கு 1 அல்லது 2 தடவைகள் தடவவும். காயத்தில் இன்னும் தைப்புக் கம்பிகள், தையல்கள், ஒட்டும் பசை, அல்லது ஒட்டும் தன்மையுள்ள சிறு பட்டை இருந்தால் ஈரப்பதமாக்கும் கிரீமை உபயோகிக்க வேண்டாம். காயம் ஆறிய 4 முதல் 6 வாரங்களுக்குப் பிறகு, ஒரு நாளுக்கு 1 அல்லது 2 தடவைகள் ஈரப்பதமாக்கும் கிரீமை உபயோகிக்கவும்.
  • புகை பிடித்தலை நிறுத்தவும்.

முக்கிய குறிப்புகள்

  • உங்கள் பிள்ளையின் காயத்தைப் பராமரிக்கும் உடல்நல பராமரிப்பு உத்தியோகஸ்தரிடம் காயம் ஆறுவது மற்றும் வடு ஏற்படுவது பற்றி எதை எதிர் பார்க்கலாம் என்று கேளுங்கள்.
  • உங்கள் பிள்ளைக்கு, காய்ச்சல், அல்லது காயத்தில் வலி, சிவந்து போதல், மற்றும் வீக்கம் ஆகியவை உட்பட நோய் தொற்றிக்கொள்ளும் அடையாளங்கள் இருந்தால் மருத்துவரைப் போய் சந்தியுங்கள்.
  • மேற்படைத்தோலின் ஊடாகச் செல்லும் பெரும்பாலான காயங்கள் ஆறும்போது ஒரு அடையாளம் அல்லது வடு தோன்றும். காயமுண்டானதைத் தொடர்ந்து சில வாரங்களுக்கு இந்த அடையாளம் எளிதில் அவதானிக்கக் கூடியதாக இருக்கும். ஆனால் பலமாதங்களுக்குப் பின்பு இது முதிர்ச்சியடைய வேண்டும் அல்லது மறைந்து போகவேண்டும்.
Last updated: October 16 2009