கோலிக்

Colic [ Tamil ]

PDF download is not available for Arabic and Urdu languages at this time. Please use the browser print function instead

​கோலிக்கை ஏற்படுத்தக்கூடிய காரணங்கள் மற்றும் சிகிச்சையளிக்கக்கூடிய வழிகள் பற்றி வாசித்துப்பாருங்கள். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும், கோலிக் குழப்பத்தையும் சலிப்பையும் ஏற்படுத்துவதாக இருந்தாலும், பெரும்பாலும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் போய்விடும

கோலிக் என்றால் என்ன?

ஒரு குழந்தை அடிக்கடி மற்றும் தீவிரமாக அழும்போது, மற்றும் ஆறுதல்படுத்துவதற்குக் கடினமானதாக அல்லது இயலாதவாறு இருக்கும் நிலை கோலிக் எனப்படும். கோலிக்கின் வரைவிலக்கணம் என்ன என்பது பற்றியும் கோலிக் என்கின்ற பதம் உபயோகிக்கப்பட வேண்டுமா என்பது பற்றியும் நிபுணர்களுக்கிடையில் வேற்றுமை நிலவுகின்றது. கோலிக் சிலவேளைகளில் “மூன்று விதிகள்” மூலம் கண்டறியப்படுகிறது: நாளொன்றுக்கு மூன்று மணி நேரம் அழுகை செய்தல், வாரத்தில் குறைந்தது மூன்று தடவைகள், குறைந்தது மூன்று வாரங்களுக்கு தொடர்ச்சியாக. அதிகப்படியான இந்த அழுகை பொதுவாக வாழ்வின் இரண்டாவது வாரத்தில் தொடங்கி இரண்டாவது மாதத்தின் முடிவுவரை தொடர்கின்றது. அதன் பின்பு இந்த கோலிக் பழக்கம் குறையத் தொடங்கி மூன்று அல்லது நான்கு மாத வயதின்போது நின்றுவிடுகின்றது.

கோலிக் உள்ள சில குழந்தைகள் தங்களுக்கு வலி உள்ளதுபோல் தோற்றமளிப்பார்கள். அவர்கள் தங்கள் கைகளையும் கால்களையும் நீட்டி, இறுக்கமாக்கி, பின்பு கைகளையும் கால்களையும் உள்ளிழுத்துக்கொள்வார்கள். அவர்களுடைய வயிறு வீங்கியதாயும் இறுக்கமாயும் இருக்கும்.

கோலிக்கிற்கான காரணங்கள்

கோலிக் என்கின்ற நிலையைப் பற்றி பூர்வ கிரேக்கர்கள் விவரித்திருந்த போதிலும்கூட இதற்கான காரணம் இன்னும் அறியப்படாமலேயே இருக்கின்றது. கோலிக் உள்ளதாக விமர்சிக்கப்படுகின்ற பிள்ளைகளுக்கு எந்த ஒரு குறிப்பிட்ட நிலைமை இல்லை எனவும், வாழ்வின் முதல் சில மாதங்களில் பிள்ளைகள் அழுகின்ற நிலைமையின் உச்சக்கட்டம் இது எனவும் சில விஞ்ஞாணிகள் நம்புகிறார்கள். சிலரோ அளவுக்கதிகமான அழுகை உடல் ஆரோக்கியம் மற்றும் வீரியத்தின் ஒரு அடையாளம் என அடித்துக்கூறுகிறார்கள்.

சில நிபுணர்கள், கோலிக்கிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகள் பங்களிப்பதாக நம்புகிறார்கள். தனிப்பட்ட விதத்தில் அழுகையில் உள்ள வித்தியாசங்கள் மூளை வளர்ச்சியோடு தொடர்புடையதே தவிர சமிபாட்டுத் தொகுதியின் வளர்ச்சியுடன் தொடர்புடையதல்ல என்பதைக் காட்ட ஆதாரங்கள் வலுவடைந்து வருகின்றன. தரம் குறைந்த பிள்ளை வளர்ப்பு போன்ற உளவியல் காரணங்கள் இருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை. மிகச் சில சந்தர்ப்பங்களில், 5% க்கும் குறைந்தவர்கள் இதற்கு ஓர்கானிக் அதாவது கரிம காரணங்கள் இருக்கக்கூடும். தாய் புகைப்பிடிப்பதுகூட அளவுக்கதிகமான அழுகை மற்றும் சிசுக்களில் கோலிக் நிலைமை ஏற்படக்காரணமென சில ஆதாரங்கள் காட்டுகின்றன.

கோலிக் பற்றிய உன்மைகள்

  • கோலிக் எந்த அளவுக்கு நடைபெறுகிறது என்பதுபற்றிய மதிப்பீடுகள் மிகவும் வேறுபடுகின்றன, ஆனால் பெரும்பாலானவை 5% தொடங்கி 25% வரையான குழந்தைகளெனக் காட்டுகின்றன.
  • மதியத்திற்குப் பின்பும் அல்லது பின்நேரங்களிலும்தான் அழுகை அடிக்கடி ஏற்படுகின்றது.
  • எந்த ஒரு குழந்தையும் கோலிக்கைக் கொண்டிருக்கலாம். இது உங்கள் குழ்ந்தைக்கு ஏதோ பிரச்சினை இருக்கின்றதென அர்த்தப்படுத்தாது.
  • கோலிக்கிற்கான காரணம் அறியப்படவில்லை, ஆனால் சில குழந்தைகளில் சாதாரண வளர்ச்சியின் பாகம் இதுவென அநேக மருத்துவர்கள் நம்புகின்றனர்.
  • பெரும்பாலும் மூன்று அல்லது நான்கு மாத வயது வரும்போது கோலிக் மறைந்துவிடுகிறது.
  • உங்கள் குழந்தை அதிக அளவு அழுதால், அழுகை உடல் நலப் பிரச்சினை ஒன்றின் அறிகுறி அல்ல என்பதை நிச்சயப்படுத்த உங்கள் மருத்துவரைப் பாருங்கள்.
  • கோலிக், பெற்றோருக்கு அதிக உளைச்சலைத் தரலாம். நீங்கள் களைப்பாக அல்லது குழப்பமடைந்தால் சற்று நேரத்துக்கு குழந்தையைப் பார்த்துக்கொள்ளும்படி இன்னொருவரிடம் கேட்கவும். இன்னொருவரைக் கண்டுபிடிக்க உங்களால் முடியவில்லையென்றால், வேறொரு அறையில் தொட்டில் போன்ற பாதுகாப்பான இடத்தில் பிள்ளையைக் கிடத்தி சற்று ஓய்வெடுங்கள். உங்கள் குழந்தையை சற்று நேரம் அழவிடுவதில் தவறில்லை. பெரும்பாலான நேரங்களில் பிள்ளை அழும்போது நீங்கள் ஆறுதல் வழங்க முயற்சிசெய்வதே முக்கியம்.
  • கோலிக் நிலைமையுள்ள குழந்தைகள் சாதாரணமான வள்ர்ச்சியைத்தான் கொண்டிருக்கிறார்கள்.
  • புட்டிப்பால் மற்றும் தாய்ப்பால் ஊட்டப்படும் சிசுக்களில் ஒரே அளவில்தான் கோலிக் ஏற்படுகிறது, ஆகவே கோலிக் நிலைமையுள்ள குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பாலூட்டுவதாக இருந்தால் அதை நிறுத்த வேண்டாம்.
  • பிள்ளையைத் தூக்கி வைத்திருத்தல் அல்லது ஆட்டுதல் மற்றும் சூப்பி ஒன்றைக் கொடுத்தல் உதவக்கூடும்.
  • கோலிக்கிற்கு மருந்து உண்மையில் உதவுமென எந்த ஆதாரமும் காட்டுவதில்லை.

உங்கள் குழந்தை அளவுக்கதிகமாக அழுதால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?

அடிக்கடி, கடுமையாக, மற்றும் ஆறுதல்ப்படுத்த முடியாதவாறு உங்கள் குழந்தை அழுதால் உங்கள் மருத்துவரைத் தொடர்புகொள்ளவும். இவ்வாறு செய்வதால் உங்கள் குழந்தைக்கு உடல் நலப்பிரச்சினை இல்லை என்பதை நீங்கள் உறுதிசெய்யலாம். பெரும்பாலும், இந்தக் கடுமையான அழுகை மறைந்துவிடும் எனவும், இந்தக் காலப்பகுதி மிகவும் கஷ்டமானதெனவும், மற்றும் உங்கள் குழந்தையை ஆறுதல்ப்படுத்த உங்களாலான எல்லாவற்றையும் நீங்கள் செய்கிறீர்கள் எனவும் மருத்துவர் உங்களுக்கு ஊக்கமளிப்பார். இருப்பினும் குறிக்கப்பட்ட மருந்தொன்றை மருத்துவரால் தரமுடியாது.

முலைப் பாலூட்டும் சிக்கல்கள் இல்லை என்பதை உறுதிசெய்ய பாலுணவு ஆலோசகர் அல்லது முலைப்பால் நிபுணர் ஒருவரிடம் செல்வது உதவக்கூடும். போதிய அளவு பால் கிடைக்காததால் உங்கள் குழந்தை பசியடைந்தால் குழந்தை முலையைக் கவ்வுகின்ற விதத்தையும் பாலின் அளவையும் முன்னேற்றுவிக்க வழிகள் இருக்கக்கூடும். தாய்ப்பால் வழங்குதல், நெருக்கமாக உடலோடு அரவணைத்து வைத்திருத்தல், தூக்கிவைத்திருத்தல் மற்றும் ஆட்டுதல், மென்மையாகப் பாடுதல் அல்லது பேசுதல், அல்லது சூப்பியொன்றை வழங்குதல் போன்ற கடந்த காலங்களில் பயன்தந்த முறைகளை உபயோகித்து பிள்ளைக்கு ஆறுதல் வழங்க தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். சில வேளைகளில் இந்த உபாயங்கள் உதவி செய்யக்கூடும்.

கோலிக்கிற்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்பதுபற்றி தற்போதைய ஆய்வுகள் என்ன கூறுகின்றன?

கோலிக்கிற்கு சிகிச்சையளிக்கப்படும்போது கவனத்தில் கொள்ளவேண்டியது என்ன

  • முலைப்பாலூட்டும் தாய்மார் தங்கள் உணவிலிருந்து பாலுணவுகள், முட்டை, கோதுமை, மற்றும் கொட்டைகள் ஆகியவற்றை அகற்றிவிடுவதால் கோலிக் நிலைமைக்கு ஓரளவு நிவாரணம் வழங்கலாமென ஆதாரங்கள் காட்டுகின்றன.
  • கமமையில், வெர்வெயின், லிக்கரிஸ், ஃபென்னல் அதாவது பெருஞ்சீரகம், மற்றும் லெமன் பாம் போன்ற மூலிகை அடங்கிய தேனீரை நாளொன்றுக்கு மூன்று தடவைகள் வாரை (150 மிலீ/ஒருடோஸ்) தாய்மார் உபயோகிக்கும்போது, கோலிக் உள்ள குழந்தைகளில் இது அழுகையைக் குறைப்பதாக காணப்பட்டுள்ளது. மூலிகத் தயாரிப்புகள் குறிக்கப்பட்ட வீரியத்தில் அல்லது ஃபோர்மூலாவில் கிடைக்காத காரணத்தால், இவற்றைப் பாவிப்பதற்கு முன் மருத்துவருடன் பேசுவதில் நிச்சயமாய் இருங்கள்.
  • உங்கள் பிள்ளையை அதிகம் தூக்கி வைத்திருப்பது அழுகையைக் குறைக்கும்; ஆனால் கோலிக் நிலைமை உள்ள உங்கள் குழந்தை அழ ஆரம்பித்துவிட்டால் இது அழுகையைக் குறைக்காது.
  • ஒவ்வாமை சரித்திரமுள்ள குடும்பங்களில் உள்ள குழந்தைகள் அல்லது பசுப்பாலுக்கு ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு, ஒவ்வாமையை ஏற்படுத்தாத புட்டிப்பால் ஃபோமுல்லாக்கள் கொடுப்பதை சில ஆதாரங்கள் ஆதரிக்கின்றன.
  • புட்டிப்பால் வழங்கப்படும் குழந்தைகள் சோயா அடிப்படை ஃபோமுலாவுக்கு மாற்றப்படும்போது அறிகுறிகளில் முன்னேற்றமிருப்பதாக சில ஆதாரங்கள் காட்டுகின்றபோதும், எல்லா மருத்துவர்களும் சோயா அடிப்படை ஃபோமுல்லக்களுக்கு மாறுவதை சிபாரிசு செய்வதில்லை. சோயாவுக்கான ஒவ்வாமை இதனால் ஏற்படக்கூடும்.

கோலிக்கிற்கு சிகிச்சையளிக்கும்போது எவற்றைச் செய்யக்கூடாது

  • தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தவேண்டாம். புட்டிப்பால் மற்றும் தாய்ப்பாலூட்டும் குழந்தைகளில் சரியான அளவிலேயே கோலிக் நிலைமை தோன்றுகிறது.
  • கோலிக் நிலைமைக்கு சிகிச்சையளிப்பதில் கைரோபிராக்டிக் மருத்துவம் எந்த நன்மையையும் காண்பிக்கவில்லை.
  • குழந்தைக்கு மசாஜ் வழங்குவது கோலிக் அறிகுறிகளை கணிசமான அளவிற்கு முன்னேற்றுவதில்லை.
  • புட்டிப்பால் வழங்கப்படும் குழந்தைகளில் நார்ச்சத்து நிரம்பிய ஃபோர்மூலாக்கள் அழுகையைக் குறைப்பதில்லை.
  • செமத்திக்கோன் எனப்படும் மருந்துக்குறிப்பில்லாமல் பெறப்படும் மருந்து கோலிக் நிலைமையைக் குறைப்பதாக ஆதாரங்கள் காட்டவில்லை.
  • குழந்தைகளுக்கு பாவிப்பதற்கு டைசைக்கிலொமைன் எனப்படும் மருந்து சிபாரிசு செய்யப்படுவதில்லை.
  • கார் ஓடுவது போன்ற விளையாட்டு இயந்திரங்களில் பிள்ளைகளை வைப்பது கோலிக் அறிகுறிகளை மேம்படுத்துவதில்லை.
  • கோலிக் உள்ள குழந்தைகளில் தொட்டில் வைபிரேட்டர்கள் அழுகையைக் குறைப்பதில்லை.

கோலிக்கிற்கு சிகிச்சையளிக்க வேறுவழிகளும் இருக்கின்றனவா?

கோலிக் உள்ள குழந்தைகளில் அழுகையைக் குறைப்பதற்கு வேறு வழிகள் முன்வைக்கப்பட்டுள்ளன, ஆனால் இவை விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்படவில்லை. இவை பின்வருவனவற்றை உட்படுத்தும்:

  • கோலிக் உள்ள குழந்தையை வக்கியூம் கிளீனருக்கு அருகே வைத்தல். வெள்ளை ஒலி குழந்தையை அமைதிப்படுத்துமென நம்பப்படுகின்றது.
  • குழந்தையின் வயிற்றில் அழுத்தத்தை ஏற்படுத்தும் விதத்தில் தூக்கிவைத்திருத்தல் – “கோலிக் பிடிகள்.”
  • குழந்தையை காரில் அழைத்து செல்லுதல் அல்லது ஸ்றோலரில் வைத்து நடந்து செல்லுதல்.
  • கிரைஃப் வாட்டர் வழங்குதல். இந்த மூலிகைத் தயாரிப்புகள் இணையதளத்திலும் உடல்நல உணவுக் கடைகளிலும் கிடைக்கிறது. இவற்றைப் பாவிப்பதால் ஆபத்தில்லை என சொல்ல முடியாது. இந்தத் தயாரிப்புகளை பாவிக்க நீங்கள் முடிவுசெய்தால், அது அல்கஹோல் மற்றும் சீனி இல்லாதது என்பதையும் நம்பிக்கைக்குப் பாத்திரமான கம்பனியால் தயாரிக்கப்பட்டதென்பதையும் நிச்சயம் செய்யுங்கள்.
Last updated: 九月 22 2009